தி.க., நிர்வாகி மதிவதனி அருவருப்பு பேச்சு: போலீசில் பா.ஜ., புகார்
தி.க., நிர்வாகி மதிவதனி அருவருப்பு பேச்சு: போலீசில் பா.ஜ., புகார்
ADDED : அக் 05, 2024 05:10 AM

சென்னை: ''இரு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு குறித்து, மிகவும் அருவருப்பாக பேசியுள்ள தி.க., நிர்வாகி மதிவதனி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது: தி.க., நிர்வாகி மதிவதனி என்பவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு குறித்து மிகவும் கேவலமாக பேசியுள்ளார். அதற்கான வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
போதைக்கு அடிமை
அந்த வீடியோவில், 'பள்ளி, கல்லுாரிகள் இருக்கும் இடத்தில் போதைப் பொருள் அதிகமாக விற்கப்படுகிறது. இது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் திட்டம். ஏனென்றால் அந்த அமைப்பினர், தன் சொந்த மக்களையே போதைக்கு அடிமைப்படுத்த சொல்கின்றனர். போதைக்கு அடிமையானால் பெண்களை நிர்வாணப்படுத்த சொல்வர். பாலியல் வன்புணர்வு செய்யவும் வலியுறுத்துவர்' என, மிகவும் கேவலமாக பேசியுள்ளார்.
தமிழகத்தில் போதை கலாசாரம் பரவி வருவதை எதிர்த்து பேசுகிற முக்கியமான அமைப்பு ஆர்.எஸ்.எஸ்., இதில் பயிற்சி பெறுவோர், இயல்பாவே போதைப் பழக்கத்துக்கு ஒருநாளும் அடிமையாக மாட்டர்.
தேசத்திற்கு தன்னையே தியாகம் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கம் உள்ள அமைப்பு ஆர்.எஸ்.எஸ்., புனிதமான ஒரு அமைப்பை பற்றி, வேண்டுமென்றே கொச்சையாக மதிவதனி பேசியுள்ளார்.
ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், இரு பிரிவினருக்கிடையே பகைமையை துாண்டி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
உரிய பரிகாரம்
சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, பெண்களின் மாண்பை குலைக்கும் விதத்திலும் பேசியுள்ள மதுவதனி மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பர் என நம்பிக்கை உள்ளது. இல்லையேல், நீதிமன்றம் வாயிலாக பரிகாரம் தேடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.