ADDED : பிப் 28, 2024 04:56 AM

சென்னை : தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைப்பதற்கு, அ.தி.மு.க., தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நான்கு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும், அ.தி.மு.க.,விடம் கேட்கப்பட்டு உள்ளது. தேர்தல் செலவையும் ஏற்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பேச்சு இழுபறியில் உள்ளது.
இதற்கிடையே, தி.மு.க., கூட்டணியில் இணைய, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், ஆளும் கட்சியின் அதிகார மையம் வாயிலாக பேச்சு நடத்தி வருகிறார்.
தே.மு.தி.க.,விற்கு ஒரு தொகுதியும், தேர்தல் செலவும் ஏற்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இரண்டு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டு, தே.மு.தி.க., தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
இதற்கிடையில், தே.மு.தி.க., தலைமையை திருப்திப்படுத்தும் வகையில், விஜயகாந்த் மைத்துனரின் தொழில் பிரச்னையில், அரசு ரீதியான உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து, தி.மு.க.,வை விமர்சிப்பதை, பிரேமலதா தவிர்த்து வருகிறார். நேற்று பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தென்காசி மாவட்டம் புளியரையில், ரயில் விபத்து நடக்காமல் தடுத்த தம்பதியருக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கிய முதல்வருக்கும், தமிழக அரசிற்கும் பாராட்டுக்கள்' என, கூறியுள்ளார்.

