தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் திடீர் சுறுசுறுப்பு: வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்கள்
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் திடீர் சுறுசுறுப்பு: வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்கள்
ADDED : அக் 26, 2025 01:14 AM

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சமூக வலைதளங்களில், தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் புதிய கணக்கை உருவாக்கி, அரசு நலத் திட்டங்கள் தொடர்பான வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர்.
தி.மு.க.,வில் சில அமைச்சர்கள் இணையதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். அவர்கள் செல்லும் பொது நிகழ்ச்சிகள், தொகுதி விஷயங்கள், மக்களுடன் உரையாடுதல் போன்றவற்றை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். அவற்றில் சில வீடியோக்கள் சர்ச்சையாகவும் மாறி வருகின்றன.
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலர், சமூக வலைதள பக்கத்தில் கணக்கே இல்லாமலும், சிலர் கணக்கு இருந்தும், 'அப்டேட்' செய்யாமலும் இருந்து வந்தனர். இந்நிலையில், சில எம்.எல்.ஏ.,க்கள் திடீரென, 'இன்ஸ்டாகிராம், 'பேஸ்புக்' தளத்தில் புதிய கணக்கை துவக்கி, வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர்.
இத்தனை ஆண்டுகளாக, வலைதளம் பக்கம் எட்டி பார்க்காதவர்கள், இப்போது தேர்தல் நெருங்குவதால், அரசு நலத் திட்டங்கள் பற்றியும், அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் பற்றியும் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
தி.மு.க.,வின் செயல்பாடுகள், அரசின் திட்டங்கள், முதல்வரின் சாதனைகளை பிரபலப்படுத்த, கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி செயல்படுகிறது.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு சமூக வலைதள பக்கங்களை கையாள்வதற்கு தனி குழு உள்ளது.
ஆனால், அவர்களால் தொடர்ந்து, 'ஆக்டிவ்' ஆக இருக்க முடிவதில்லை. இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாகி உள்ளனர்.
அரசு திட்டங்களையும், தாங்கள் மக்களுக்கு செய்த நல்ல விஷயங்களையும் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

