தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., 6 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா 'சீட்?'
தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., 6 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா 'சீட்?'
ADDED : ஜன 29, 2026 05:40 AM

தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு ஆறு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கும் தகவல் வெளியாகியுள்ளது.
தே.மு.தி.க., துவங்கிய பின் நடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அக்கட்சி தனித்து போட்டியிட்டது; அக்கட்சியின் தலைவர், மறைந்த விஜயகாந்த் மட்டும் விருத்தாசலத்தில் வெற்றி பெற்றார். 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு, அக்கட்சி தோல்வி அடைந்தது.
தொடர் தோல்வி:
கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 29 தொகுதிகளில் தே.மு.தி.க., வெற்றி பெற்றது. அதற்கு பின், அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில், அக்கட்சி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.
குறிப்பாக, ஒவ்வொரு தேர்தலின்போதும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என, இரு தரப்பிலும் நடத்துகிற பேரம், அக்கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
தொடரும் குழப்பம்
கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தே.ஜ., கூட்டணியிலும், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியிலும், தே.மு.தி.க., போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க.,வுடனும், அ.தி.மு.க.,வுடனும் மாறி மாறி கூட்டணி பேசியது. இதை அறிந்து, இரு கட்சிகளும் கூட்டணியில் சேர்க்காமல் தே.மு.தி.க.,வை கழற்றி விட்டன. வேறு வழியின்றி, அத்தேர்தலில், அ.ம.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போதும் தோல்வியே மிஞ்சியது.
கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, ஐந்து லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது. விருதுநகர் தொகுதியில், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டு, மிகக் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
வரும் சட்டசபை தேர்தலில், யாருடன் கூட்டணி என்பது குறித்து, ஜன., 9ல் நடந்த கடலுார் மாநாட்டில் அறிவிப்பதாக சொன்ன தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, 'இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை; நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன்' என கூறி, தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தினார். இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடாத பிரேமலதா, தொடர்ந்து கூட்டணி விஷயத்தில் குழப்பி வருகிறார்.
அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., தரப்பில் 17 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்டு அடம் பிடித்ததால், அக்கூட்டணியில் தமிழக தலைவர் பழனிசாமி, தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தி.மு.க.,விடம் நடத்திய ரகசிய பேச்சில், தே.மு.தி.க.,வுக்கு ஆறு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் தர முடிவாகி உள்ளதாக தெரிகிறது.
- நமது நிருபர் -

