ADDED : பிப் 03, 2026 04:39 AM

தி.மு.க., அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள எட்டு மண்டல பொறுப்பாளர்களிடம், வேட்பாளர்கள் பரிந்துரை பட்டியலை முதல்வர் ஸ்டாலின் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தொகுதிவாரியாக, கட்சி நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, தங்கள் தொகுதி நிலவரத்தை அவர்கள் கூறினர்.
இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு, தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனத்திடம் கூறப்பட்டது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தொகுதிகளுக்கு சென்று விசாரித்து, அறிக்கை அளித்தனர்.
மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஐந்து பேர் கொண்ட தகுதியான வேட்பாளர் பட்டியலையும் கொடுத்துள்ளனர்.
விருப்ப மனுக்கள் பெறாத நிலையில், சில தொகுதிகளில், 'நான் தான் வேட்பாளர்' என, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர். அதற்கு, தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் தந்த நம்பிக்கை காரணம் என்று தெரியவந்துள்ளது.
தி.மு.க., வேட்பாளர் தேர்வு, வெளியில் கசியாமல், ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். எனவே, அமைப்பு ரீதியாக உள்ள எட்டு மண்டல பொறுப்பாளர்களிடமும், வேட்பாளர் பரிந்துரை பட்டியலை தயார் செய்து தரும்படி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'தேர்தல் வியூக வகுப்பாளர்கள், மாவட்டச் செயலர்கள், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளிடம், பரிந்துரை பட்டியல்களை முதல்வர் ஸ்டாலின் பெற்றுள்ளார்.
'வெற்றி வாய்ப்பு, ஜாதி, கட்சி பணி, பொருளாதார வசதி, தலைமைக்கு விசுவாசம் என்ற அடிப்படையில் வேட்பாளர் பட்டியல் தயாராகிறது' என்றனர்.
- நமது நிருபர் -

