ம.தி.மு.க.,வால் தி.மு.க.,வுக்கு நெருக்கடி? 12 தொகுதிகள் கேட்க வைகோ திட்டம்
ம.தி.மு.க.,வால் தி.மு.க.,வுக்கு நெருக்கடி? 12 தொகுதிகள் கேட்க வைகோ திட்டம்
ADDED : டிச 05, 2025 06:13 AM

தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெறவும், கட்சி நிர்வாகிகளை திருப்திப்படுத்தவும், தி.மு.க., கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்க ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., ஆறு தொகுதிகளில், தி.மு.க.,வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. அதில், நான்கு தொகுதிகளில் வென்றது. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திருச்சி தொகுதியில், ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ, சுயேச்சை சின்னமான தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெறுவதற்காக, தனி சின்னத்தில் போட்டியிட ம.தி.மு.க., விரும்புகிறது. இதற்காக தி.மு.க.,வின் சின்னத்தில் போட்டியிடுவதை தவிர்க்க முடிவு செய்து உள்ளது.
ம.தி.மு.க.,வில் தற்போது, அரியலுார் சின்னப்பா, மதுரை தெற்கு பூமிநாதன், சாத்துார் ரகுராமன், வாசுதேவநல்லுார் சதன் திருமலைகுமார் என, நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இந்த தொகுதிகளுடன் கூடுதலாக எட்டு தொகுதிகள் என, மொத்தம் 12 தொகுதிகளை தி.மு.க., கூட்டணியில் கேட்பதென, ம.தி.மு.க., தலைமை தி ட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, ம.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: ம.தி.மு.க.,வில் தற்போது நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அதே தொகுதிகளை மீண்டும் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநில அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் , பொருளாளர் செந்திலதிபன், துணைப் பொதுச்செயலர்கள் ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், டாக்டர் ரொக்கையா ஆகியோரும், மூன்று மாவட்டச் செயலர்களும், தேர்தலில் போட்டியிட விரும்புகின் றனர். எனவே, மொத்தமாக 12 தொகுதிகளை கேட்க, வைகோ திட்டமிட்டு உள்ளார்.
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு, கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்கினால் எங்களுக்கும் ஒதுக்க வேண்டும். எந்த கட்சிக்கும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்காவிட்டால், தி.மு.க., தரும் தொகுதிகளை ஏற்க தயார் என்று கூற, வைகோ திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

