உளவுத்துறை போலீசார் வாயிலாக இழுபறி தொகுதிகளில் தி.மு.க., ஆய்வு
உளவுத்துறை போலீசார் வாயிலாக இழுபறி தொகுதிகளில் தி.மு.க., ஆய்வு
ADDED : அக் 12, 2025 02:15 AM

தி.மு.க., கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு, தனியார் ஏஜன்சி குழு வாயிலாக மேற்கொண்ட கருத்து கணிப்பு தகவல்கள், முதல்வர் ஸ்டாலினிடம் சமீபத்தில் வழங்கப்பட்டது.
இதையடுத்தே கடந்த செப்டம்பரில், மண்டல பொறுப்பாளர்கள், தேர்தல் பிரிவு நிர்வாகிகளுடன், முதல்வர், சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது இழுபறியாகவும், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு சாதகமாகவும் உள்ள தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதை அழுத்திச் சொன்னார்.
அதையடுத்து, பல தொகுதிகளிலும் பல்வேறு பணிகளை கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கட்சியினரின் செயல்பாடுகளில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை.
இதனால், தி.மு.க., 'வீக்'காக மற்றும் இழுபறியாக உள்ள சட்டசபைத் தொகுதிகளில், ஓட்டுச்சாவடி வாரியாக கள நிலவரத்தை சேகரித்து அனுப்பும்படி, உளவுத்துறை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இப்பணியில் உளவுத்துறை போலீசார், தமிழக அளவில் ஒரு வார காலமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தி.மு.க.,வுக்கு சாதகமற்ற, இழுபறியாக உள்ள தொகுதிகளில், உளவுத்துறை போலீசார் ஓட்டுச்சாவடி வாரியாக சென்று, பாக முகவர், பாக குழுவினர், தி.மு.க., இன்னாள், முன்னாள் தலைவர், கவுன்சிலர்கள், கட்சி சாராத முக்கியஸ்தர் என ஐந்து பேரிடம் கருத்து கேட்கின்றனர்.
மகளிர் நலன் சார்ந்த திட்டங்கள், பிற அரசு திட்டங்களில் மக்களிடம் உள்ள வரவேற்பு; அரசின் திட்டங்கள் செயல்படுத்தாமல் உள்ளதா என தகவல் சேகரிக்கப்படுகிறது.
கூ டவே அ.தி.மு.க., அல்லது பிற கட்சியினருக்கு, ஓட்டுச்சாவடி சாதகமாக இருப்பின், ஜாதி, கட்சியின் பலம் அல்லது அதற்குரிய வேறு காரணங்கள் என்ன, தி.மு.க.,வுக்கு சாதகமாக ஓட்டுகள் பெற என்னசெய்ய வேண்டும், என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இதன் அடிப்படையில் 'வீக்' மற்றும் இழுபறி தொகுதிகளை கணக்கிட்டு தன் வசப்படுத்த, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -