தி.மு.க., உறுப்பினர்கள் சேர்ப்பு மந்தம்; நட்சத்திர ஹோட்டலில் நிர்வாகிகள் மோதல்
தி.மு.க., உறுப்பினர்கள் சேர்ப்பு மந்தம்; நட்சத்திர ஹோட்டலில் நிர்வாகிகள் மோதல்
ADDED : ஆக 13, 2025 04:30 AM

சென்னை: 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில், தி.மு.க.,வில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டத்திற்காக, பிரத்யேகமாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
செயலியில் உள்ளீடு செய்யப்படும் தகவல், எந்த தொகுதியில், எந்த ஓட்டுச்சாவடியில், எவ்வளவு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற விபரம், கட்சி தலைமைக்கு தெரிய வரும்.
மாவட்ட செயலர்கள் அனுப்பி வைத்த, 'பூத் டிஜிட்டல் ஏஜென்ட்' பட்டியலை, தலைமை நிலையத்தில் சரிபார்த்தபோது, முறைகேடாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விழுப்புரம் வடக்கு, சென்னை மேற்கு உட்பட சில மாவட்டங்களில், உறுப்பினர்கள் சேர்ப்பு பணி மந்தமாக உள்ளது.
சென்னை அறிவாலயம் அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், ஆயிரம்விளக்கு கிழக்கு பகுதி, தி.மு.க., நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், வட்டச் செயலர்கள், உறுப்பினர் சேர்க்கை பணிகளை சரியாக செய்யவில்லை என, பகுதி நிர்வாகிகள் புகார் கூறினர். வட்டச் செயலர்கள் அனைவரும் ஒன்று கூடி, பகுதி நிர்வாகிகள் சரியாக செயல்படவில்லை என்றனர்.
சில வட்ட செயலர்கள், மாவட்ட நிர்வாகிகள் மீதும் குற்றம் சாட்டினர். ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்ட, வாக்குவாதம் முற்றி மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
மூத்த நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். இத்தகைய சூழ்நிலையில், சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10:30 மணிக்கு, மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடக்க உள்ளது.
இக்கூட்டத்தில், தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை மந்தமாக உள்ள மாவட்டங்களில், நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளி யாகி உள்ளது.