UPDATED : பிப் 11, 2024 12:13 PM
ADDED : பிப் 11, 2024 12:48 AM

லோக்சபா தேர்தலில், 35 தொகுதிகளில் போட்டியிட, தி.மு.க., திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்பெயின் பயணத்தை முடித்து சென்னை திரும்பியதும், தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினரை அழைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசினார். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை, கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
40 தொகுதிகள்
சென்னை அறிவாலயத்தில் நடந்த, லோக்சபா தொகுதிகளின் நிர்வாகிகள் கூட்டங்களில், 40 தொகுதிகளிலும் தி.மு.க.,வே போட்டியிட வேண்டும் என வலியுறுத்திய தகவலை, முதல்வர் ஸ்டாலினிடம், தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்தனர்.
'கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த எண்ணிக்கையை ஒதுக்கி தந்துவிட்டு, தி.மு.க., அதிக தொகுதிகளில் போட்டியிடுவதே நல்லது' என, நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களையும், முதல்வரிடம் எடுத்துக் கூறினர்.
சில தொகுதிகளில் காங்கிரஸ் எம்.பி.,க்கள், மக்களை சந்திக்கவே செல்லவில்லை என்றும், அந்த தொகுதிகளை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கினால் தோல்வி நிச்சயம் என்று, கட்சியினர் கூறிய எச்சரிக்கையையும், முதல்வர் காதில் போட்டனர்.
இதற்கிடையில், எந்தெந்த தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட வேண்டும் என ஆய்வு செய்த தேர்தல் வியூக நிறுவனத்தின் அறிக்கை குறித்தும், முதல்வரிடம் விளக்கப்பட்டுள்ளது.
முதல் சுற்று பேச்சு
அதன் பின், காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க.,வுக்கு தொகுதிகளை குறைப்பது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 30 முதல் 35 தொகுதிகள் வரை, தி.மு.க., போட்டியிடலாம் என்று திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இச்சூழலில், நாளை விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிகளுடன், தி.மு.க., குழுவினர், முதல் சுற்று பேச்சு நடத்த உள்ளனர்.
- நமது நிருபர் -

