செஞ்சோற்று கடன் தீர்க்க திமுகவுக்கு பிரசாரம் செய்கிறார் மாரி செல்வராஜ்
செஞ்சோற்று கடன் தீர்க்க திமுகவுக்கு பிரசாரம் செய்கிறார் மாரி செல்வராஜ்
UPDATED : ஜன 22, 2026 08:43 AM
ADDED : ஜன 22, 2026 05:01 AM

- நமது நிருபர் -
தென் மாவட்டங்களில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூக ஓட்டுகளைப் பெற, தேர்தல் பிரசாரத்தில் இயக்குநர் மாரி செல்வராஜை ஈடுபடுத்த, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரி செல்வராஜ்; திரைப்பட இயக்குநர். ஐந்து படங்களை இயக்கி உள்ளார். இதில், துணை முதல்வர் உதயநிதியை வைத்து எடுத்த மாமன்னன் படமும் அடக்கம். அப்படத்தின் வழியே தி.மு.க., தரப்போடு நெருக்கமான மாரி செல்வராஜை, வரும் சட்டசபை தேர்தலில் களமிறக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது.
இது குறித்து, தி.மு.க நிர்வாகிகள் கூறியதாவது: நீண்ட காலமாக தி.மு.க., வசமிருந்த பட்டியலின ஓட்டு வங்கி மற்றும் இளைஞர்கள், த.வெ.க., பக்கம் சாய்ந்து வருவதாக 'சர்வே' முடிவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, தென் மாவட்டத்தில் அடர்த்தியாக உள்ள தேவேந்திர குல வேளாளர் உள்ளிட்ட பட்டியலின சமூக ஓட்டுகளைப் பெற, அம்மக்கள் மத்தியில் ஈர்ப்புடைய ஆட்கள் தி.மு.க.,வில் இல்லை.
அச்சமூக மக்களிடம், இயக்குநர் மாரி செல்வராஜ் தன் படங்கள் வழியே பிரபலமாகி இருக்கிறார். இதனால், அவர் வழியே அந்த மக்களின் ஓட்டுகளைப் பெற கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, மாரி செல்வராஜுக்கு தேவையான பல உதவிகளை துணை முதல்வர் உதயநிதி செய்து வருகிறார். சமீபத்தில், மாரி இயக்கத்தில் வெளியான பைசன் படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட பிரச்னைகளை, உதயநிதி தரப்புதான் சரிசெய்து கொடுத்தது.
அதேபோல், படம் வெளியான பின் அதை விளம்பரப்படுத்த, தென் மாவட்டங்கள் முழுதும் எல்லா திரையரங்குகளுக்கும் படக்குழுவோடு மாரி சென்றார். அதற்கான ஏற்பாடுகளை, உதயநிதி போட்ட உத்தரவுப்படி, ஆங்காங்கே இருக்கும் தி.மு.க., நிர்வாகிகள்தான் செய்து கொடுத்தனர்.
சமீபத்தில், சிவகாசியில் மாரி செல்வராஜுவுக்கு பாராட்டு விழா நடந்தது. அதில், தி.மு.க., சார்பில் சங்கரன்கோவில் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜாவும் கலந்து கொண்டு, மாரியை பாராட்டி பேசினார்.
தற்போது தி.க., சார்பில், 'பெரியார் விருது' மாரிக்கு வழங்கப்பட்டது. விருது மேடையில், தி.மு.க.,வை தொடர்ச்சியாக விமர்சிக்கும் சீமானை, மாரி விமர்சித்து பேசினார். அதோடு, த.வெ.க., தலைவர் விஜய் குறித்தும் விமர்சிக்கத் துவங்கி உள்ளார். இதற்கு, தேவேந்திர குல வேளாளர் இன மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, தென் மாவட்டங்களை மையமாக வைத்து, இலக்கியம், சினிமா சார்ந்த மேடைகளை மாரிக்காக அமைத்துக் கொடுத்து, அவரை மறைமுகமாக தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த தி.மு.க., தலைமை முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

