கான்ஸ்டன்டைன் ரவீந்திரனின் ஜாதியை பகிரங்கப்படுத்திய தி.மு.க., 'போஸ்டர்'
கான்ஸ்டன்டைன் ரவீந்திரனின் ஜாதியை பகிரங்கப்படுத்திய தி.மு.க., 'போஸ்டர்'
UPDATED : மார் 09, 2026 03:00 PM
ADDED : மார் 09, 2026 06:15 AM

சென்னை: ஜாதி அடையாளத்தை காட்டிக்கொள்ளாத கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கி, தி.மு.க., செய்த விளம்பரம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு நெருக்கமாக இருந்தவர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட, விஜயகாந்த் அவருக்கு வாய்ப்பு வழங்கினார்.
ஆனால், தேர்தலில் தோல்வி அடைந்தார். தே.மு.தி.க.,வில் அவர் வளர்வதை பிடிக்காத சிலர், அவரை ஓரம்கட்டினர். இதனால் அதிருப்தி அடைந்த அவர், தி.மு.க.,வில் இணைந்தார். தற்போது, தி.மு.க., நடத்தும் ஆங்கில நாளேட்டின் ஆசிரியராக உள்ளார்.இந்நிலையில், தி.மு.க., சார்பாக, ராஜ்யசபா எம்.பி., ஆகிறார்.
இதையடுத்து, 'ராஜ்யசபாவில் மீனவர் குரல். எங்களது நீண்டகால கோரிக்கையை ஏற்று, மீனவ சமுதாயத்தை சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு எம்.பி.,யாக வாய்ப்பளித்த தி.மு.க.,விற்கும், முதல்வருக்கும் நன்றி' என, தமிழகம் முழுவதும் மீனவ பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தி.மு.க., தலைமையின் ரகசிய உத்தரவின்படி, இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேராசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தார். அவர் என்ன ஜாதி என்பதே இதுவரை பலருக்கும் தெரியாமல் இருந்தது.
எம்.பி., பதவியை வழங்கி, அவரது ஜாதியை கூறி விளம்பரம் செய்யப்பட்டது, அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்துவ மீனவர்கள் ஓட்டு, விஜய்க்கு கிடைக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிந்ததால், அதை மடைமாற்ற இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

