கம்யூனிசத்தை விமர்சித்து தி.மு.க., ராஜா பேச்சு: பதிலடியாக வெளியான பாடலால் சர்ச்சை
கம்யூனிசத்தை விமர்சித்து தி.மு.க., ராஜா பேச்சு: பதிலடியாக வெளியான பாடலால் சர்ச்சை
ADDED : ஜன 10, 2025 05:03 AM

பெரம்பலுார்: 'அந்த சாரு யாரு சொல்லவேணும் ராசா' என, நீலகிரி எம்.பி.,யும், தி.மு.க., துணை பொதுச்செயலருமான ராஜாவை விமர்சித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., நிர்வாகி எழுதியுள்ள பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், கம்யூனிசம் மற்றும் திராவிட கொள்கைள் குறித்து ராஜா பேசுகையில், 'சுயநலவாதிகள் ஆன தலைவர்களால் கம்யூனிசம் தோற்றது' என விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராஜாவையும், அவர் சார்ந்திருக்கும் தி.மு.க.,வையும் விமர்சித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., நிர்வாகி வரத வசந்தராஜன் என்பவர் எழுதியுள்ள பாடல், சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பாடல் வரிகள்:
காளை மாட்டில் கறப்பவராம் ராசா ராசா
காம்புமில்லே மடியுமில்லே லேசா லேசா
காற்றலையில் காசுபார்த்த ராசா ராசா
கம்யூனிசம் பழிக்க வந்த காமெடி பீசா!
பெண்ணுரிமை பேசியதும்
பழங்கதையாச்சு!
மாணவிகள் வெளிவரவே
பயப்படலாச்சு!
உடன்பிறப்பு மாட்டுதுங்க பாலியல் கேசா
அந்த சாரு யாரு சொல்லவேணும் ராசா ராசா! (காளை)
பரம்பரைக்கு தலைமைப்பதவி பட்டா போட்டாச்சு
பட்டியல் ஜாதிகளை ஒதுக்கி விட்டாச்சு
சமூகநீதி பேசுகிற ராசா ராசா
சந்ததிக்கே துாக்கலாமா கூசா கூசா!
இப்படி அந்தப் பாடல் வரிகள் உள்ளன.

