கறார் காட்டுகிறது தி.மு.க., : கடுப்பில் கம்யூனிஸ்ட்கள்
கறார் காட்டுகிறது தி.மு.க., : கடுப்பில் கம்யூனிஸ்ட்கள்
ADDED : மார் 14, 2026 05:26 AM

- நமது நிருபர் -
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் என தி.மு.க., கறார் காட்டுவதால், கடுப்பான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க உள்ளன.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஆறு தொகுதிகள் வழங்கப்பட்டன. இவற்றில், இரு கட்சிகளும், தலா இரு தொகுதிகளில் தான் வெற்றி பெற்றன.
எனவே, வரும் சட்டசபை தேர்தலில், இரு கட்சிகளுக்கும் தொகுதிகளை குறைத்து கொடுக்க, தி.மு.க., முடிவெடுத்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக, தி.மு.க., குழுவினரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் குழுவினர் இரண்டு முறை பேச்சு நடத்தினர்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏழு தொகுதிகளை கேட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 10 தொகுதிகள், அதாவது இரட்டை இலக்கத்தில் ஒதுக்குமாறு கேட்டது.
தி.மு.க., தரப்பில், இரு கட்சிகளுக்கும் தலா நான்கு தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டணியில் கட்சிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இதற்கு மேல் தர இயலாது என்றும் கறாராக கூறப்பட்டு விட்டது.
கடுப்பான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், தி.மு.க.,வுடன் பேச்சு நடத்த வராமல் அடம் பிடித்து வருகின்றன. இரு கட்சிகளும் நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டி, இந்த பிரச்னையில் முடிவெடுக்க உள்ளன.
அதன்படி, இன்று காலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டமும், நாளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டமும் நடக்க உள்ளன.

