கமல் கட்சியிடம் 'கறார்' காட்டும் தி.மு.க.,: உதயசூரியனில் போட்டியிடவும் நெருக்கடி
கமல் கட்சியிடம் 'கறார்' காட்டும் தி.மு.க.,: உதயசூரியனில் போட்டியிடவும் நெருக்கடி
ADDED : மார் 20, 2026 05:49 AM

- நமது நிருபர் -
கூட்டணியில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்குவதாகவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனவும் தி.மு.க., அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக, கமல் தலைமையில் அவரது கட்சியினர் சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய கமல், தி.மு.க., ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி.,யாகி விட்டார். இந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்துள்ள அவரது கட்சிக்கு, 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்க்கும் ம.நீ.ம., கட்சி, 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிடவும் விரும்புகிறது.
சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினருடன் நேற்று நடந்த பேச்சில், ம.நீ.ம., பொதுச்செயலர் அருணாச்சலம் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். அப்போது, 'உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்; இரண்டு தொகுதிகளுக்கு மேல் தர முடியாது' என தி.மு.க., தரப்பில் கறாராக கூறப்பட்டுள்ளது. இதனால், கமல் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியுடன் வெளியேறினர்.
அருணாச்சலம் அளித்த பேட்டி: தி.மு.க., தரப்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கோரிக்கை வைத்தனர். கடந்த தேர்தல்களில், 'டார்ச் லைட்' சின்னம் வாயிலாக 4 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளோம். எனவே, அந்த சின்னத்திலேயே போட்டியிடுவோம் என வலியுறுத்தினோம். தொகுதி எண்ணிக்கை பேச்சு சுமுகமாகவே முடிந்தாலும், சின்னம் குறித்த பேச்சு தான் நீடித்து வருகிறது. கமல் முடிவு தான் இறுதியானது. இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க., தரப்பில் நடந்த பேச்சு விபரங்கள், நேற்று ஹைதராபாத் புறப்பட தயாராக இருந்த கமலுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கட்சியின் நிர்வாகக் குழுவை கூட்ட அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கமல் கட்சியின் அவசர நிர்வாகக் குழு கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள சாம்கோ ஹோட்டலில் இன்று மாலை நடக்கிறது. அதில், எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

