UPDATED : டிச 06, 2024 04:39 AM
ADDED : டிச 06, 2024 02:16 AM

அதானி லஞ்ச விவகாரம் தொடர்பாக வித்தியாசமான போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், புதிய பார்லிமென்டின் பிரதான நுழைவாயிலான, 'மகர் துவார்' முன், நேற்று காலை 10:30 மணிக்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூடினர். வந்திருந்த அனைவரும் கருப்பு நிறத்தில் ஜெர்கின் அணிந்திருந்தனர்.
மகர் துவார் படிக்கட்டுகளில் நின்றபடி, எப்போதும் ஆர்ப்பாட்டம் நடத்துவர். ஆனால், இவ்வாறு படிக்கட்டுகளில் நின்று, போவோர் வருவோருக்கு இடையூறு செய்வதால், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி, அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என, லோக்சபா செயலகம் அறிவுறுத்திஇருந்தது.
இதனையடுத்து, படிக்கட்டுகளில் நின்றுகொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதை தவிர்த்துவிட்டு, மகர் துவார் வாயில் முன்பாக இருக்கும் காலி இடத்தில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். கோஷங்களை எழுப்பியபோது, திரிணமுல் காங்., சமாஜ்வாதி கட்சிகளின் எம்.பி.,க்கள் கலந்து கொள்ளவில்லை. வந்திருந்த முக்கிய கூட்டணி கட்சியான தி.மு.க.,வின் எம்.பி.,க்கள் கருப்பு நிற ஜெர்கினை அணியாமல் தவிர்த்து விட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக முன்வரிசையில் நின்று தீவிரமான கோஷங்கள் போட்ட சில தி.மு.க., - எம்.பி.,க்களை காணவில்லை. வந்திருந்த சிலரும், பின் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். பலரும் சுரத்தே இல்லாமலும், கோஷங்கள் போடாமலும் இருந்தனர்.
ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிந்த எம்.பி.,க்கள், அங்கிருந்து ஊர்வலமாக, பழைய பார்லிமென்ட் கட்டடத்தை நோக்கி சென்று, அங்குள்ள படிக்கட்டுகளில் ஏறி நின்று கோஷமிட்டனர். இந்த ஊர்வலத்தில் கனிமொழி, பாலு, ராஜா உள்ளிட்ட தி.மு.க., - எம்.பி.,க்கள் யாரும் செல்லவில்லை. இது தெரியாமல், ஆர்வக்கோளாறில் அங்கு சென்றுவிட்ட அப்துல்லா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் சட்டென சுதாரித்து, மீண்டும் மகர் துவார் பகுதிக்கே வந்துவிட்டனர்.
பின்பு காங்கிரஸ் எம்.பி.,க்கள், புதிய மற்றும் பழைய பார்லிமென்ட் கட்டடங்களுக்கு இடையிலான பகுதியை கோஷமிட்டபடியே ஊர்வலமாக வலம்வரத் துவங்கினர். இதை துாரத்திலிருந்து பார்த்தவுடன், என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும் அங்கிருந்து நழுவி, சென்றுவிட்டனர்.
தி.மு.க., - எம்.பி.,க்கள்தான் காங்கிரசை அம்போவென பாதிலேயே கைகழுவி விட்டுச் சென்றனரே தவிர, கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., வைகோ, வி.சி.க., ரவிக்குமார், முஸ்லிம் லீக் நவாஸ் கனி ஆகியோர், ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தில் முழுதுமாக கலந்துகொண்டு வலம் வந்தனர். நடப்பதற்கு சிரமப்பட்ட வைகோவை, அவரது கையைப் பிடித்து பாதுகாப்பாக, ராகுல் தன்னுடன் ஊர்வலத்தில் அழைத்து வந்ததைக் காண முடிந்தது.
- நமது டில்லி நிருபர் -