தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு அரசியல்: அமைச்சர்கள் - மா.செ.,க்கள் தயக்கம்
தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு அரசியல்: அமைச்சர்கள் - மா.செ.,க்கள் தயக்கம்
ADDED : ஜன 29, 2026 05:28 AM

'தீ பரவட்டும்' என்ற தலைப்பில் ஹிந்தி எதிர்ப்பு அரசியலை மையப்படுத்தினால், சட்டசபை தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என கருதி, மொழி அரசியலை முன்னெடுக்க, தி.மு.க., அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1960ம் ஆண்டு களில், தமிழகத்தில் ஹிந்தி மொழி எதிர்ப்பு, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு போராட்டங்களை நடத்தி, தி.மு.க., ஆட்சியை கைப்பற்றியது.
தேர்தல் கூட்டணி
ஹிந்திக்கு முக்கியத்துவம் தந்த காங்கிரஸ் அரசை எதிர்த்து அரசியல் செய்த தி.மு.க., அந்த காங்கிரசுடனேயே தேர்தல் கூட்டணி அமைத்தது. 'இது கொள்கை கூட்டணி அல்ல; தேர்தல் கூட்டணி' என, தி.மு.க., தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.
காங்., முன்னாள் தலைவர் சோனியா, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் கூட்டு முயற்சியில், 2004 லோக்சபா தேர்தலில் உருவான கூட்டணி, வரும் சட்டசபை தேர்தலில் தொடருமா என கேள்விக்குறியாகி உள்ளது.
தி.மு.க., - காங்., கூட்டணி அமைத்து, கடந்த 22 ஆண்டுகளில், எந்த தேர்தலிலும் ஹிந்தி எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கவில்லை. ஆனால், வரும் தேர்தலில் மட்டும், 'தீ பரவட்டும்' என்ற தலைப்பில், ஹிந்தி மொழி எதிர்ப்பு அரசியலில் தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது.
மொழிப்போர் தியாகிகள் நாளையொட்டி, சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து, நடராஜன், தருமாம்பாள் ஆகியோர் நினைவிடங்களில், வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் மாணவர் அணி சார்பில், 10,000 பேர் கருப்பு 'டி - சர்ட், பேன்ட்' அணிந்து பேரணியாக பங்கேற்றனர்.
காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வரும் தேர்தல் ஆரிய - திராவிடப் போர்; திராவிடப் போரின் மற்றொரு களம் தான், 2026 தேர்தல் களம்; டில்லி ஆதிக்கத்திற்கு, தமிழகம் என்றைக்கும் தலைகுனியாது,” என்றார்.
இந்த சூழ்நிலையில், சென்னை, காஞ்சிபுரம் தவிர, மற்ற மாவட்டங்களில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக் கூட்டங்களுக்கு, மாணவர்களை அழைத்து வர, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் மற்றும் அமைச்சர்கள் தயக்கம் காட்டி உள்ளனர்.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: இந்தக் கால மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு, ஹிந்தி மொழி தடையாக இருக்கப் போவதில்லை. இளைஞர்கள் மற்றும் வேலை தேடுவோருக்கு, ஹிந்தி மொழி ஒரு கூடுதல் திறமையாக கருதப்படுகிறது.
கடும் பின்னடைவு
எனவே, மாணவர் களின் கல்வி வளர்ச்சி, இளைஞர்களின் வேலை வாய்ப்புகளில் அக்கறை காட்டி, தேர்தல் அறிக்கை வெளியிட்டு, வெற்றி பெற தி.மு.க., முயற்சிக்க வேண்டும்.
மாணவர்களை மையப்படுத்தி மொழி அரசியல் செய்தால், சட்டசபை தேர்தலில் கடும் பின்னடைவு ஏற்படும் என, மூத்த மாவட்டச் செயலர்கள், அமைச்சர்கள் தயங்கியதால் தான், வீர வணக்க நாள் கூட்டங்களில் மாணவர்கள் பங்கேற்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

