மஹாராஷ்டிராவில் சுழன்றடிக்கிறது தி.மு.க.,வின் மொழிப்போர் சூறாவளி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
மஹாராஷ்டிராவில் சுழன்றடிக்கிறது தி.மு.க.,வின் மொழிப்போர் சூறாவளி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ADDED : ஜூலை 06, 2025 02:40 AM

சென்னை : 'தி.மு.க.,வின் மொழி உரிமைப்போர், மஹாராஷ்டிராவில் போராட்ட சூறாவளியாக சுழன்றடிக்கிறது' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
ஹிந்தி திணிப்பை முறியடிக்க தி.மு.க.,வும், தமிழக மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்தி வரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து, இப்போது மஹாராஷ்டிராவில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக, உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த வெற்றி பேரணியின் எழுச்சியும், பேச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.
'உத்தர பிரதேசம், ராஜஸ்தானில் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன? ஹிந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன; ஹிந்தி பேசாத முன்னேறிய மாநிலங்கள் மீது ஏன் ஹிந்தியைத் திணிக்கிறீர்கள்?' என்று, ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு ஹிந்தி, சமஸ்கிருதத்தை வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற மத்திய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி, 2,152 கோடி ரூபாயை விடுவிப்போம் என்று, தமிழகத்தை பழிவாங்கும் போக்கை, இனியாவது மத்திய அரசு மாற்றிக் கொள்ளுமா?
ஹிந்தி திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை ஹிந்தி நாடாக்கும் செயல் திட்டத்தைப் புரிந்து கொள்ளாமலும், 'ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும்' என்ற பசப்பு வார்த்தைகளை கிளிப்பிள்ளைகளைப் போல ஒப்பிக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும்.
மஹாராஷ்டிராவின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்.
தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும், தமிழகத்திற்கும் செய்து வரும் துரோகத்துக்கு, பா.ஜ., பரிகாரம் தேட வேண்டும்.
இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும், தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்டும் ஒருமுறை கற்பிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

