'டில்லி உஷ்ஷ்ஷ்...'; தெரு சண்டை அரசியல் பலனளிக்குமா?
'டில்லி உஷ்ஷ்ஷ்...'; தெரு சண்டை அரசியல் பலனளிக்குமா?
ADDED : ஜன 18, 2026 05:10 AM

சமீபத்தில் கொல்கட்டாவில், 'ஐ - பேக்' நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. உடனே, போலீஸ் அதிகாரிகள் சூழ, அந்த நிறுவனத்திற்குள் அதிரடியாக நுழைந்து, அமலாக்கத்துறை சோதனையை தடுத்து நிறுத்தினார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அத்துடன், அங்குள்ள ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துக் கொண்டு போகாமல் தடுத்து, இவரே எடுத்துக்கொண்டு வந்தார். அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது, கொல்கட்டா போலீஸ் வழக்கும் பதிவு செய்தது.
ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தடை செய்ததுடன், மம்தாவின் செயலையும் கண்டித்தது. 'தெருவில் இறங்கி அரசியல் செய்வது மம்தாவின் வழக்கம்' என்கின்றனர் இவரது கட்சியினர். இளைஞர் காங்கிரஸில் இருந்த போது, அதிரடியாக தெருவில் இறங்கி, ஜெயபிரகாஷ் நாராயணுக்கு எதிராக போராடியவர்.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து ஆட்சியில் இருந்த இடது சாரிகளுக்கு எதிராக இப்படி அதிரடி அரசியல் நடத்தியவர் மம்தா. 1984 பார்லி., தேர்தலில் பிரபலமான இடது சாரி தலைவர், சோம்நாத் சட்டர்ஜியை தோற்கடிக்க காரணமே, இந்த தெருச் சண்டை அரசியல் தான்.
சிங்கூர், நந்திகிராம் போராட்டங்களை நடத்தி, 34 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியை ஒழித்தவர். இந்த அதிரடி அரசியல், இவருக்கு புகழை அளித்ததுடன், தேர்தலில் வெற்றியையும் தேடித் தந்தது. கடந்த 2019 பிப்ரவரியில் கொல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் மீது, சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு பதிவு செய்து, அவர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டது சி.பி.ஐ., அப்போது தெருவில் அமர்ந்து போராட்டம் செய்தார் மம்தா.
இதேபோல மே 2021ல் இவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியும், அவரது மனைவியும் நிலக்கரி ஊழலில் சி.பி.ஐ.,யால் விசாரிக்கப்பட்ட போதும், இப்படித்தான் போரட்டத்தில் ஈடுபட்டார். இன்னொரு வழக்கில், மம்தா கட்சியினர் சி.பி.ஐ.,யால் மே மாதம் 2021ல் கைது செய்யப்பட்டனர்; அப்போது ஆறு மணி நேரம் சி.பி.ஐ., அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார் மம்தா.
இப்படிப்பட்ட அதிரடி அரசியல், அவருக்கு பெரிதும் உதவியது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல்-, மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது; எனவே மீண்டும் அதிரடி அரசியலை ஆரம்பித்துள்ளார் மம்தா. இது அவரது வெற்றிக்கு உதவுமா?

