எலியை போல அமைதியாக இருக்காதீங்க: ஊடகங்களை சாடிய காங்., ராகுல்
எலியை போல அமைதியாக இருக்காதீங்க: ஊடகங்களை சாடிய காங்., ராகுல்
ADDED : ஆக 13, 2026 04:13 AM

- நமது சிறப்பு நிருபர் -
''ஊடகங்கள் எலியை போல அமைதியாக இருக்கக்கூடாது,'' என, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்தார்.
டில்லியில் உள்ள பார்லி., வளாகத்தின் மகர் துவார் பகுதியில், நிருபர்களை சந்தித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, நிருபர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார்.
கோபமடைந்த ராகுல், ''என்னிடம் குறுக்கிட்டு கேள்வி கேட்ட மாதிரி, ஆளுங்கட்சியினரிடம் உங்களால் கேட்க முடியுமா?'' என, கேள்வி எழுப்பினார்.
அந்த நிருபர் மீண்டும் கேள்வி எழுப்பிய போது, ''என்னிடம் மட்டுமே குறுக்கீடு செய்கிறீர்கள். 24 மணி நேரமும் குறுக்கிடுகிறீர்கள். ஆனால், ஆளுங்கட்சியினரிடம் கேள்வியும் கேட்பதில்லை; குறுக்கீடும் செய்வதில்லை.
''பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ஊடகங்கள் ஒருபோதும் குறுக்கிடுவதில்லை.
''என்னிடம் மட்டும் ஏன் குறுக்கிடுகிறீர்கள்? அமித் ஷாவிடம் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? அனைத்து ஊடகங்களும் ஏன் சுண்டெலியை போல மவுனம் காக்கின்றன?'' என, ராகுல் மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதேபோல், பார்லி.,க்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த காங்., லோக்சபா எம்.பி., பிரியங்கா, ''ஊடகங்கள் மவுனமாக இருப்பதை போல நாங்களும் இருக்க வேண்டுமா?
''மாணவர்கள் மீதான தடியடி விவகாரத்தில் மத்திய அரசை பொறுப்புக்கூற செய்வதற்கு பதில், பார்லி., முடக்கம் குறித்து எதிர்க்கட்சிகளை மட்டுமே ஊடகங்கள் கேள்வி கேட்பது ஏன்?'' என, கேள்வி எழுப்பினார்.
