ADDED : மார் 16, 2026 03:16 AM

- ஆர்.ஜெகன்நாதன் -
மதம் மாறினாலும், அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக தன் பழைய மதத்தை தொடரும், இரட்டை மத வேடப் போக்கு அதிகரித்து வருகிறது. அதை நிரூபிக்கும் ஆதாரங்களை நீதிமன்றங்கள் நிராகரிப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. இதனால் மதம் மாறாமல் இருப்பவருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் பறிக்கப்படுகின்றன.
ஹிந்துவாக இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறும் சிலர், அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக மதம் மாறியதை மறைத்து, ஆவணங்களில் மட்டும் ஹிந்துவா க தொடர்கின்றனர். ஆனால், கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகின்றனர். அவர்களை 'கிரிப்டோ கிறிஸ்துவர்கள்' என அழைக்கின்றனர்.
இந்த கிரிப்டோ கிறிஸ்துவர்களின் முறைகேடுகளை நிரூபிக்க பலர் நீதிமன்றங்களில் வழக்குகளை தொடர்ந்தனர்; ஆனால், பெரிதாக பலன் இல்லை.
சமீபத்தில், மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 'ஒருவரது வீட்டில் இயேசுவின் சிலையோ அல்லது சிலுவை சின்னமோ இருப்பதை மட்டுமே வைத்து, அவர் கிறிஸ்துவராக மாறிவிட்டார் என்று கருத முடியாது' என தெரிவித்துள்ளது.
'ஹிந்துக்கள் மற்ற மதச் சின்னங்களையும் மதிக்கும் பண்பு கொண்டவர்கள் என்பதால், இது போன்ற அடையாளங்கள் மதமாற்றத்திற்கான வலுவான ஆதாரங்களாக எடுத்துக்கொள்ள முடியாது' என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அதேபோல், மதமாற்றத்தை உறுதிப்படுத்த ஞானஸ்நானம் பெற்றதற்கான ஆவணங்கள் அல்லது சான்றிதழ்கள் அவசியம் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தொடரும் சிக்கல்
நீதிமன்றத்தின் இந்த நிபந்தனை நடைமுறையில் பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. அதாவது, அனைத்து கிறிஸ்துவப் பிரிவுகளும் ஞானஸ்நானத்தை ஒரு கட்டாய சடங்காகக் கொண்டிருப்பதில்லை. உதாரணமாக குவாக்கர்ஸ், சால்வேஷன் ஆர்மி போன்ற பிரிவுகளில் ஞானஸ்நானம் கட்டாயம் அல்ல.
ஒருவர் வேறு மதத்திற்கு மாறிவிட்டாரா என்பதை சரிபார்க்கும் அரசு அதிகாரிகளுக்கு, சர்ச்சுகள் ஞானஸ்நான பதிவேடுகளை வழங்குவதற்கு முன் வருமா என்பதும் கேள்விக்குறியே.
தமிழகத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கிறிஸ்துவரை திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளையும் கிறிஸ்துவ மத முறைப்படி வளர்த்து, தன் மருத்துவமனையில் சிலுவையை தொங்கவிட்டிருந்தார்.
அவர் மதம் மாறியது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் ஹிந்து மதத்தைக் கைவிட்டார் என்பதற்கு இது போதிய ஆதாரமல்ல என கூறி, சென்னை உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
இதனால், மதமாற்றத்தை நிரூபிக்க, நீதிமன்றங்கள் கேட்கும் ஆதாரங்களை திரட்டுவது என்பது மிக கடினமாக இருக்கிறது. நிரூபிக்க முடியாததால் பலர், இரட்டை பலன் பெற்று 'கிரிப்டோ- கிறிஸ்துவர்களாக'வே வாழ்க்கையை தொடர்கின்றனர்.
அதாவது, புதிதாக மாறிய கிறிஸ்துவ மத நம்பிக்கைகளை பின்பற்றுவதுடன், ஆவணங்கள் அளவில் ஹிந்துக்களாக நீடிப்பதன் மூலம் பட்டியலினத்தவருக்கான அரசின் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை எந்தத் தடையுமின்றி பெற்று வருகின்றனர்.
தனியுரிமை
மதமாற்றம் குறித்த விரிவான விசாரணைகளை மேற்கொள்வது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என, உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், முறையான விசாரணை இன்றி 'கிரிப்டோ- கிறிஸ்துவத்தை' அடையாளம் காண்பது என்பது சாத்தியமற்றது. இதனால், தகுதியுள்ள உண்மையான பட்டியலின ஹிந்துக்களுக்கான வாய்ப்புகள் பறிபோக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மதமாற்றம் என்பது வெறும் தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்தது மட்டுமல்ல, அது சட்ட ரீதியான சலுகைகளோடும் தொடர்புடையது என்பது கவனிக்கத்தக்கது.
