அமைச்சர் நேரு துறையில் பணி நியமனத்தில் ஊழல்; வழக்கு பதிவு செய்யும்படி டி.ஜி.பி.,க்கு ஈ.டி., கடிதம்
அமைச்சர் நேரு துறையில் பணி நியமனத்தில் ஊழல்; வழக்கு பதிவு செய்யும்படி டி.ஜி.பி.,க்கு ஈ.டி., கடிதம்
UPDATED : அக் 30, 2025 10:17 AM
ADDED : அக் 30, 2025 04:43 AM

சென்னை: 'தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து, அதன் நகலை எங்களுக்கு அனுப்புங்கள்' என, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு உள்ளார். இவரது தம்பி ரவிச்சந்திரன். இவர், 30 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த ஏப்ரலில் சென்னை, திருச்சி மற்றும் கோவையில், ரவிச்சந்திரன் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது, நேரு அமைச்சராக உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேர்வில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழக பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: வங்கி கடன் மோசடி தொடர்பாக நாங்கள் நடத்திய சோதனையில், பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை ஆய்வு செய்த போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்ததில், மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. பணியாளர் மற்றும் அதிகாரிகள் நியமனத்திற்கு, அவர்களின் பதவியை பொறுத்து, நபர் ஒருவருக்கு, 25 - 35 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளோம்.
இந்த ஊழல் தொடர்பாக, 232 பக்கங்களில் விரிவான அறிக்கையை உங்களுக்கு அனுப்பி உள்ளோம். பணி நியமனம் தொடர்பாக, ஹவாலா பணப் பரிமாற்றம் நடந்ததற்கான புகைப்படங்கள், ரொக்கம் பெற்றதற்கான சான்றுகள், ஆவணங்கள், அதிகாரமிக்க நபர்களின் மொபைல் போனில் இருந்த வாட்ஸாப் தகவல்கள் போன்றவற்றை சேகரித்து, அனுப்பி வைத்துள்ளோம். அவற்றை ஆய்வு செய்தில், இந்த ஊழலில் சில அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், உதவியாளர்கள் ஈடுபட்டிருப்பது உறுதியாகி உள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு, அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேர்வு முடிவு வெளியிடும் முன்னரே, பணம் வசூலிக்கப்பட்ட நபர்களுக்கு தகவல்கள் கசிய விடப்பட்டு உள்ளன; லஞ்சம் வசூலித்து பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. லஞ்சம் கொடுத்தவர்களுக்காக, ஆட்கள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. லஞ்ச பணம் வங்கிகள் வாயிலாகவும், சில நிறுவனங்களின் பெயர்களிலும் வசூலிக்கப்பட்டு உள்ளன. இந்த ஊழலால், ஏராளமான தகுதி வாய்ந்த இளைஞர்கள் தங்களின் எதிர் காலத்தை இழந்துள்ளனர். எனவே, இந்த ஊழல் குறித்து சட்ட ரீதியாக விசாரிக்க வேண்டும்.
தேர்வு முடிவு தொடர்பான ரகசிய தகவல்கள், யாரால், யார் யாருக்கு முன்கூட்டியே கசிய விடப்பட்டன; லஞ்சம் கொடுத்த நபர்களுக்காக, தேர்வு முடிவுகளை எப்படி மாற்றினர்; இந்த ஊழலில் அண்ணா பல்கலை அதிகாரிகள் யார் யார் ஈடுபட்டனர்; அவர்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார்; எத்தனை பேரின் மதிப்பெண்கள் மாற்றப்பட்டன; தகுதியான, திறமையான நபர்கள் எத்தனை பேர் நிராகரிக்கப்பட்டனர்; ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் யார்; இடைத்தரர்களாகச் செயல்பட்ட நபர்கள் யார்? அவர்கள் வாயிலாக வசூலிக்கப்பட்ட தொகை யாரிடம் வழங்கப்பட்டது என விசாரிக்க வேண்டும்.
இது குறித்து விசாரித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அதன் நகலை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போது தான் எங்களால் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டில் இருந்து, 2021ம் ஆண்டு வரையுள்ள, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், போதிய நியமனங்கள் செய்யப்படாமல், காலி பணியிடங்கள் அதிகமாகி, நிர்வாகத்தை மேற்கொள்வதில் மிகுந்த சிரமங்கள் இருந்தன. இதையடுத்து, 2019ல் 2,569 காலியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை வாயிலாக 2024 பிப்., 2ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வர்களிடம் விண்ணப்பங்கள் பெற, தனியாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டது. அதன் வாயிலாக 2.04 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை பரிசீலிக்கப்பட்டு, 38 மாவட்டங்களில், 591 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. எழுத்து தேர்வு வினாத்தாள்கள் அனைத்தும், அண்ணா பல்கலைக் கழகம் வாயிலாக மதிப்பிடப்பட்டு, 2024 செப்., 20ம் தேதி இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
நியாயமான முறையில் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டதால், விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஒரு ஆட்சேபனை கூட பெறப்படவில்லை. நேரடி நியமனம் தொடர்பாக பல்வேறு வழக்குகளும், தடையாணைகளும் நிலுவையில் இருந்த நிலையில், 2025 ஜூலை 4ம் தேதி, அனைத்து தடைகளும் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார். இத்தகைய வரலாற்று சாதனையை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நிகழ்த்தியது.
இதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அதற்கு களங்கம் கற்பிக்கும் வகையில், அமலாக்கத்துறை வாயிலாக மத்திய அரசு இத்தகைய அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தேர்வுகளை முன்னின்று மிகச் சிறப்பாக நடத்திய அண்ணா பல்கலை, உலகில் தலைசிறந்த சுயாட்சி பல்கலைக் கழகங்களுள் ஒன்று. இது, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் வராது. முந்தைய ஆட்சியில், 2012 முதல் 2017 வரை பல்வேறு பதவிகளுக்கு, இதே அண்ணா பல்கலை வாயிலாகத்தான் தேர்வுகள் நடத்தி, பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த பிரச்னையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்று, தகுதியற்ற நபர்களை பணியில் அமர்த்தி, மோசடி நடந்துள்ளது. இது, தி.மு.க., ஆட்சியில் ஊழல் வேரூன்றி இருப்பதை வெளிப்படுத்துகிறது. இரு மாதங்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலினின் கரங்களால் பணி ஆணை வழங்கப்பட்ட பணி தேர்விலேயே இத்தகைய முறைகேடு நடந்திருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில், இது போன்று எத்தனை மோசடிகள் நடந்திருக்கும் என யோசிக்கையில் மலைக்க வைக்கிறது. காற்றில் துவங்கி கழிப்பறை வரை ஊழல் செய்து, தமிழகத்தின் கஜானாவை காலி செய்தது போதாதென்று, தற்போது நேர்மையான தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி வரும், தி.மு.க., அரசின் ஊழல் மோகத்தை அடக்க, இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணை செய்ய வேண்டும். - தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் புதிய ஊழியர்களை நியமிக்க நடந்த தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும்; 800 கோடி ரூபாய்க்கு மேல் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த ஊழலில், தி.மு.க., அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மற்றும் அவரது சகோதரர்களின் நிறுவனங்கள், அதிகாரிகள் இணைந்து, வேலை வாய்ப்புக்காக முயற்சித்தவர்களிடம் 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வசூலித்துள்ளனர். தமிழக காவல் துறை பொறுப்பு டி.ஜி.பி., இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல், நடுநிலையோடு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப்பணி என்பது பல்வேறு இளைஞர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க, இரவு, பகல் பாராமல் போராடிக் கொண்டிருக்கும் அவர்களின் உழைப்பை, தங்களின் கமிஷன் கொள்ளைக்காக சிதைக்கும், தி.மு.க., அரசுக்கு ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் - அ.தி.மு.க., பொதுச்செயலர், பழனிசாமி
நேர்மையான தேர்வர்களுக்கு பாதிப்பு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதில், இடைத்தரகர்கள் வாயிலாக சிலரிடம் பணம் பெற்று, பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், தமிழக காவல் துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இது, தேர்வை நேர்மையாக எதிர்கொண்ட பிற தேர்வர்களை கொந்தளிப்பு அடையச் செய்துள்ளது. எனவே, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு மீதும், தேர்வு நடத்திய அண்ணா பல்கலை மீதும், போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். - அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்

