இலவச மின்சாரம் ரத்து செய்ய மின் இணைப்பு கணக்கெடுப்பு; அரசின் மீது மக்கள் அதிருப்தி
இலவச மின்சாரம் ரத்து செய்ய மின் இணைப்பு கணக்கெடுப்பு; அரசின் மீது மக்கள் அதிருப்தி
ADDED : அக் 22, 2024 07:00 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் : 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மின் இணைப்புகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. இதுதவிர உள்ளாட்சித் துறையும் சொத்து வரியை உயர்த்தியுள்ளதால் மக்கள் அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. பலர் வீட்டின் கீழ் பகுதிக்கு ஒரு இணைப்பும், மாடிக்கு ஒரு இணைப்பும் பெற்றுள்ளனர். இதில் சில முறைகேடுகளும் நடக்கின்றன.
கீழ் தளத்தில் பெற்றோர் வசிக்கும் நிலையில், முதல் மாடியில் ஒரு மகன் குடும்பத்தினரும், இரண்டாவது மாடியில் மற்றொரு மகன் குடும்பத்தினரும், தனித்தனி மின் இணைப்புகள் பெற்று வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வருவாய் இழப்புகளை தடுக்க மின்வாரியம் தற்போது ஒரு வீட்டில் 2 மின் இணைப்புகள் இருந்தால் அதனை ஒரே மின் இணைப்பாக மாற்றி அமைக்க கணக்கெடுத்து வருகிறது. இதனால் 100 யூனிட் இலவசம் மின்சாரம் பெறும் வாய்ப்பை பலர் இழக்கவேண்டி வரும்.
இந்நிலையில் 2022--23ம் நிதி ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் மேலும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் கூடுதலாக 6 சதவீதம் வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் நடப்பு நிதியாண்டில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை, வரும் அக்., 30க்குள் செலுத்தினால் 5% ஊக்கத் தொகையும் கட்ட தவறினால் ஒரு சதவீத தாமத கட்டணமும் வசூலிக்க உள்ளாட்சி துறை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி தமிழகத்தில் தற்போது வரி வருவாய் வசூல் பணியில் உள்ளாட்சி அமைப்புகளின் பில் கலெக்டர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனால் கூடுதல் மின் கட்டணம், சொத்து வரி உயர்வு ஆகிய இரண்டு நிதி தாக்குதலால் மக்கள் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு மூச்சுத்திணற செய்யும் நிலையில் இந்த விலை உயர்வுகள் அரசின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.