'எஸ்.ஐ.ஆரை., எதிர்த்தாலும் நானும் பெயர் சேர்க்க வேண்டுமே'
'எஸ்.ஐ.ஆரை., எதிர்த்தாலும் நானும் பெயர் சேர்க்க வேண்டுமே'
ADDED : நவ 25, 2025 04:47 AM

சென்னை: ''எஸ்.ஐ.ஆரை., எதிர்த்தாலும் வாக்காளர் பட்டியலில், என் பெயர் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் நானும் ஈடுபடுவேன்,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில், வி.சி., சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை கண்டித்து, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், திருமாவளவன் பேசியதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை, மத்திய பா.ஜ., அரசு உள்நோக்கத்தோடு செயல்படுத்துகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் வேண்டாம் என்று, நான் கூறினாலும், வாக்காளர் பட்டியலில் என் பெயரை சேர்க்கத்தான் வேண்டும்; வேறு வழி இல்லை. எப்படியும் நான் தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்தி விட்டனர்.
எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதும், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதும், திராவிடம் பேசுபவர்கள் இருக்கக்கூடாது என்பதும், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் அரசியல் திட்டம்.
தமிழகத்தில் பா.ஜ.,வின் பின்புலமான ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் லேசாக வேர் விடத் துவங்கி உள்ளது; உட்கட்சி பிரச்னையை வைத்து, அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்தி வருகிறது.
'மோடியா, இந்த லேடியா' எனக் கேட்டு முழங்கிய ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை, பா.ஜ.,வால் அ.தி.மு.க., உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியவில்லை.
ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதை சொல்வதால், இரு கட்சிகள் மீதும் திருமாவுக்கு வன்மம் என யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம்; விமர்சனம் மட்டுமே.
அ.தி.மு.க., மீதுள்ள நன்மதிப்பால், அவர்களுக்கு ஆதரவான கருத்துகளை பதிவு செய்தோம்; அதை அ.தி.மு.க., புரிந்துகொள்ளவில்லை.
வருங்காலத்தில் அ.தி.மு.க.,வை பா.ஜ., அழித்துவிடும். இதெல்லாம் புரிந்தால், அ.தி.மு.க.,வுக்கும், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமிக்கும் நல்லது. இவ்வாறு பேசினார்.

