வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று பெற விலக்கு: அடுத்த மதத்தவரின் வழிபாடு முடங்கும் என கொந்தளிப்பு
வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று பெற விலக்கு: அடுத்த மதத்தவரின் வழிபாடு முடங்கும் என கொந்தளிப்பு
ADDED : ஜன 17, 2026 05:58 AM

'மதம் சார்ந்த கட்டடங்களுக்கு, கலெக்டரின் தடையில்லா சான்று பெறாமல் திட்ட அனுமதி வழங்கப்படும்' என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 'இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். மேலும், இது போன்ற அறிவிப்பால் தெருக்கள்தோறும் ஜெபக் கூடங்கள், தொழுகை இடங்கள் ஏற்படுத்தி, மத மாற்றம் செய்யும் வேலைகள் நடக்க, அரசே வழிவகுத்து கொடுக்கிறது' என, ஹிந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
தமிழகத்தில் பொது கட்டட விதிகள் அடிப்படையில், கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மத பயன்பாட்டுக்கான கட்டடம் கட்டும்போது, அது அமையும் இடத்தில் உள்ளவர்களுக்கு எந்த வகை பிரச்னை ஏற்படும் என பார்க்க வேண்டும்.
அதிகளவில் மக்கள் வந்து செல்லும் கட்டடங்களை, குறுகலான இடத்தில் கட்டக்கூடாது. பொது ஒழுங்கு பாதிக்கப்படுமா என பார்த்து, தடையின்மை சான்றை கலெக்டர் வழங்க வேண்டும். அவ்வாறு, கலெக்டரிடம் தடையின்மை சான்று பெறும் கட்டுப்பாடு இருக்கும்போதே, பல இடங்களில் மதச்சார்பு கட்டடங்களால் பிரச்னை ஏற்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த வழிபாட்டு இடங்கள் அருகருகே அமைகின்றன. ஒரு மதத்தினர் விழாக்களுக்கு, அரசு அதிகபட்ச ஆதரவு அளிப்பதும், இன்னொரு மதத்தினரின் விழாக்களை முடக்குவதும், மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய சூழலில், பொது அமைதியை பாதிக்கும் இடங்களில் மதம் சார்ந்த கட்டடங்கள் அமைந்தால், மக்கள் மத்தியில் பிரச்னை ஏற்படும்.
கடந்த டிசம்பர் 23ல், கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 'கடந்த 2019 முதல், 2024 வரை செயல்பட்டு இருக்கக்கூடிய தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிமுறைகள், 2019ன்படி உள்ள மதம் சார்ந்த கட்டடங்களுக்கு, கலெக்டரின் தடையில்லா சான்றை வலியுறுத்தாமல், திட்ட அனுமதி வழங்கப்படும்.
'இந்த காலத்தில் திட்ட அனுமதி வேண்டி, விண்ணப்பித்திருக்கும் மதச்சார்பான கட்டடங்களுக்கு இது பொருந்தும்' என பேசினார். தொடர்ந்து, கடந்த ஜன., 8ல் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இது குறித்து கட்டட பொறியாளர்கள் கூறியதாவது: குடியிருப்புகள், அலுவலக வளாகங்கள் கட்டும்போது, பக்கவாட்டில் காலியிடம் விட வேண்டும்; எப்.எஸ்.ஐ., எனப்படும் தளப்பரப்பு குறியீட்டை பார்க்க வேண்டும்; வாகன நிறுத்துமிடம் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஆனால், மதச்சார்பு அடிப்படையில் வழிபாட்டு கட்டடங்கள் கட்டும்போது, அதில் வாகன நிறுத்துமிடம், பக்கவாட்டு காலியிடம் விடப்படுவது இல்லை. இத்துடன் குறுகலான பகுதியில், உயரமான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
இந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தால், மற்றவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, வழிபாட்டு கட்டடங்களுக்கு, என்.ஓ.சி., விலக்கு அளிக்கக்கூடாது. மேலும், பொது கட்டட விதிகள் வருவதற்கு முன், மத கட்டடங்கள் கட்ட, கலெக்டரிடம் தடையின்மை சான்று பெறுவது நடைமுறையில் உள்ளது.
இந்த சான்று கேட்காமல் கட்டடங்களை அனுமதித்தால், அது மக்கள் மத்தியில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். தமிழக அரசின் அரசாணை தவறான நோக்கத்தில் பயன்படுத்தப்பட்டால், தமிழகம் முழுதும் ஒரு மதத்தினரின் ஆட்சேபம் காரணமாக, இன்னொரு மதத்தினரின் வழிபாடு முடங்கும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
* சேலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின துறை அதிகாரிகள் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் சர்ச், மசூதி கட்ட அனுமதி கேட்டு, எந்த விண்ணப்பமும் அரசு கோப்பில் இல்லை. அந்தந்த தாசில்தார் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று, வழிபாட்டு தலம் கட்டப்பட வேண்டும். ஆனால், அப்படி யாரும் முறையாக அனுமதி பெற்றதாக தெரியவில்லை.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 தாலுகாவில் ஏற்காடு தவிர்த்து, 13 தாலுகாவில் 413 சர்ச்சுகள் உள்ளன. ஏற்காடு தாலுகாவில் நிறைய சர்ச்சுகள் இருந்தும், கணக்கெடுப்பு நடத்தாததால், அரசு கோப்பில் அவை பற்றிய விபரம் எதுவும் இல்லை. சேலம் மாநகரில் பெரிய, சிறிய தர்கா, மசூதி என மொத்தம் 74ம், அதேபோல், மாவட்டத்தில் 135ம் உள்ளன. அதில், மயானமும் அடக்கம். இது தவிர, கணக்கில் வராத தர்காவும் உண்டு. துல்லியமான புள்ளி விபரம் அரசு கோப்பில் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
* கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அலுவலக ஊழியர்கள் கூறுகையில், 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2024 முதல், ஓசூர் ஜூஜூவாடி, சாந்தி நகர், போச்சம்பள்ளி அடுத்த ஜிங்கல் கதிரம்பட்டி, மத்திகிரி, சென்னத்துார் ஆகிய ஐந்து இடங்களில் சர்ச்சுகள் கட்டவும், மோரனப்பள்ளியில் மசூதி கட்டவும் அனுமதி கோரி மனு அளித்து நிலுவையில் உள்ளது.
'கடந்தாண்டில், ஓசூர் சுற்றுவட்டாரத்தில் இரு இடங்களில் சர்ச் கட்ட அனுமதி கோரியுள்ளனர். அதேபோல் மூன்று இடங்களில் சர்ச் கட்ட, அரசின் தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக உள்ள கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகளின் விபரங்கள் கையில் இல்லை. அந்தந்த தாசில்தார் மற்றும் பி.டி.ஓ., அலுவலகங்களில் இருக்கலாம்' என்றனர்.
கரூர் மாவட்டத்தில் புதிதாக சர்ச் கட்ட அனுமதி வேண்டி, எட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. அந்த விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனையில் உள்ளன. மேலும் வீடு, பிற கட்டடங்களில் செயல்படும் சர்ச், வழிபாட்டு கூடங்களுக்கு பெரும்பாலும் அனுமதி பெறுவதில்லை. அது பற்றிய புள்ளி விபரம் மாவட்ட நிர்வாகத்திடம் இல்லை என, அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
* ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வெளிநாட்டில் இருந்து நிதி பெற்று சர்ச் கட்டும்போது, அரசின் அனுமதி இதுவரை பெறப்பட்டு வந்தது. மூன்று இடங்களில் சர்ச் கட்டுவதற்கான விண்ணப்பம் மட்டும் பரிசீலனையில் உள்ளன.
வீடு, பிற கட்டடங்களில் பெயரளவில் செயல்படும் சர்ச், வழிபாட்டு கூடம், சபைகளுக்கு பெரும்பாலும் அனுமதி பெறுவதில்லை. அதே நேரம், பள்ளிவாசல், மசூதி போன்றவை எங்காவது கட்டுகின்றனர். அதுவும், தற்போதைய நிலையில் விண்ணப்பம் ஏதும் நிலுவையில் இல்லை' என்றனர்.
* நாமக்கல் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட சர்ச்சுகள் உள்ளன. புதிதாக சர்ச் கட்ட, தற்போது வரை எந்த விண்ணப்பமும் இல்லை. அதேபோல், மசூதி கட்டுவதற்கு, ஒரு விண்ணப்பம் மட்டும் பரிசீலனையில் உள்ளது. இதே நிலை தான், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நிலவுகிறது.
- நமது நிருபர் குழு -

