பஸ் பயணிகளின் எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்! குறைகிறது மகளிர் இலவச பஸ்கள்
பஸ் பயணிகளின் எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்! குறைகிறது மகளிர் இலவச பஸ்கள்
UPDATED : நவ 14, 2024 05:50 AM
ADDED : நவ 14, 2024 05:19 AM

கோவை: சரவணம்பட்டியையும் துடியலுாரையும் இணைக்கும் வழித்தடத்தில் எட்டு தாழ்தள சொகுசு பஸ்கள் இயக்கப்படுவதால் அதே வழித்தடத்தில் இயக்கப்பட்ட மூன்று சாதாரண பஸ்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை நகரில், 602 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதில்,180 சிகப்பு நிற பஸ்கள் உள்ளன. மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில், 422 பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துக்கழக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.
இவற்றோடு சமீபத்தில், 24 அதிநவீன தாழ்தள சொகுசு பஸ்கள் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டன. அதனால் கோவையில் இயங்கும் டவுன் பஸ்களின் தற்போதைய எண்ணிக்கை, 626 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் எளிதான போக்குவரத்தும் பயணிகளின் எதிர்பார்ப்பும் இனியும் நிறைவேறவில்லை. அதனால் ஒட்டுமொத்த டவுன் பஸ்களின் இயக்கத்தை செம்மைப்படுத்தி எளிமைப்படுத்த வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
கொரோனா காலகட்டத்தின் போது இயக்கப்படாமல் ரத்து செய்யப்பட்ட டவுன்பஸ் வழித்தட பட்டியலின் அடிப்படையிலேயே தற்போதும் கோவை நகரில் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
டவுன்பஸ்கள் இயக்கம் தொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளை சந்தித்து பேசினால், இங்க பாருங்க கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட பஸ்களை பற்றி பேசாதீங்க, அது நிறுத்துனது நிறுத்துனது தாங்க. இப்ப என்னவோ அதைப்பற்றி மட்டும் பேசுங்க என்கின்றனர்.
அந்த பட்டியலுக்கு மாற்றாக கோவை நகரிலுள்ள ஒவ்வொரு டவுன்பஸ் வழித்தடத்தையும் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கள ஆய்வு செய்ய வேண்டும்.
அதன்பின்பு எந்தெந்த வழித்தடங்களில் பயணிகள் பயணிக்க வேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
சில வழித்தடங்களில் பெண் பயணிகள் இலவசமாக பயணிக்கும் டவுன்பஸ்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு அவ்வழித்தடத்தில் ஐந்து அல்லது ஆறு எண்ணிக்கையில் தாழ்தள சொகுசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
காலை மற்றும் மாலை இரண்டு நடைகள் மட்டுமே சில வழித்தங்களில் டவுன்பஸ்கள் இயக்கப்படுகிறது.
மற்ற நடைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்த பலனுமில்லை.
சரவணம்பட்டியையும் துடியலுாரையும் இணைக்கும் வழித்தடத்தில் எட்டு தாழ்தள சொகுசு பஸ்கள் தற்போது இயக்கப்படுகின்றன.
அதே வழித்தடத்தில் இயங்கி வந்த மகளிர் இலவசமாக பயணிக்கும் மூன்று சாதாரண டவுன் பஸ்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது இயக்கப்படும் தாழ்தள சொகுசு பஸ்களும் சரியான நேரங்களில் இயக்கப்படாததால் கல்லுாரிக்கு செல்லும் மாணவர்களும் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களும் விவசாயிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
மக்கள் சேவையை மனதிற்கொண்டு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் முறையான வழித்தட ஆய்வை அவசியம் மேற்கொண்டு பயணிகளின் தேவைக்கு ஏற்றாற் போல் பஸ்களை இயக்க வேண்டும்.