நீக்கப்பட்ட 'மாஜி' மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்ப்பு
நீக்கப்பட்ட 'மாஜி' மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்ப்பு
ADDED : மே 06, 2025 02:59 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் விஜயகுமார்; திருவள்ளூர் மாவட்ட புரட்சித்தலைவி பேரவை செயலராகவும், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலராகவும் இருந்தார்.
கடந்த மார்ச் மாத துவக்கத்தில், மஞ்சங்கரணை பகுதியில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, பா.ஜ., சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டார்.
அப்போது, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இல்லாத நிலையில், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாகக் கூறி, விஜயகுமாரை கட்சியின் அடிப்படை பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார், கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி.
தற்போது, அ.தி.மு.க., - பா.ஜ., இடையே கூட்டணி உறுதியானதை தொடர்ந்து, நேற்று முன்தினம் மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டார்.
