தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ எக்ஸ்பயரி ஆகும் மருந்து 'திராவிட மாடல்'

 எக்ஸ்பயரி ஆகும் மருந்து 'திராவிட மாடல்'

 எக்ஸ்பயரி ஆகும் மருந்து 'திராவிட மாடல்'

7


UPDATED : ஏப் 10, 2026 06:17 AM

ADDED : ஏப் 10, 2026 12:07 AM

Follow on GoogleFavourite on Google

7

UPDATED : ஏப் 10, 2026 06:17 AM ADDED : ஏப் 10, 2026 12:07 AM


7
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அங்கதன்

angathan786@gmail.com

தி.மு.க., 2021ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கையோடு, எதையாவது புதிதாக உதார் விட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில், அப்போது பிரபலமாக பேசப்பட்டு வந்த 'குஜராத் மாடல்' என்பதற்கு சவால் விடும் வகையில் 'திராவிட மாடல்' என்று, யாரோ எங்கோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை வைத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு மேடை முழங்கத் தொடங்கினார்.

இதை, தி.மு.க., அமைச்சர்களும் தொண்டரடிப் பொடிகளும் பின்தொடர்ந்தனர். 200 ரூபாய் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வெளிவரும் சமூக ஊடகப் பதிவுகள் வாயிலாக, 'திராவிட மாடல்' என்ற சொல்லாடல் தமிழகத்தில் வலுக்கட்டாயமாக பரவலாக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளும் ஏதாவது சின்னச் சின்ன பிரச்னைகளையும் கையில் எடுத்து, 'இதுதான் திராவிட மாடலா?' என்று கேள்வி எழுப்பி வந்தனர். காவலரை கன்னத்தில் அறையும் ஏதாவது ஒரு தி.மு.க., பிரமுகரின் வீடியோ; ஏதோ ஒரு பெண்மணியை தலையில் செல்லமாக தட்டும் அமைச்சரின் வீடியோ; 'நீங்க ஓசியில் தானே பஸ்ஸுல போறீங்க?' என்று பெண்களை அசட்டுத்தனமாக கேள்வி கேட்கும் அமைச்சரின் வீடியோ என தொடங்கி, வேங்கைவயல் சம்பவம் போன்ற பெரிய பாதகங்களுடன் திராவிட மாடல் என்ற சொல்லாடலை இணைத்து சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.

கடந்த 2022ல் பிரதமர் மோடி சென்னைக்கு வரும் வரை, அதனுடைய அர்த்தம் யாருக்குமே தெரியாமல் இருந்தது. நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க மோடி வந்தபோது, அதே மேடையில் ஸ்டாலின், 'சமூக நீதி, சமத்துவம், பெண்கள் நீதி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியே திராவிட மாடல்' என்று பேசியதை, மிக்க புளகாங்கிதத்துடன் பகிர்ந்த தி.மு.க., சார்பு ஊடகங்கள், அந்த மேடையில் 'திராவிட மாடல்' பற்றி பிரதமருக்கு ஸ்டாலின் பாடம் எடுத்ததாக தலைப்பு வைத்து, சில நாட்கள் கொண்டாடிக் கொண்டு இருந்தனர்.

இப்படி எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருந்தபோது, திராவிட மாடலின் அஸ்திவாரத்தையே சீமானும் அண்ணாமலையும் புரட்டிப் போட்டனர். 'திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் வந்தேறி தத்துவம்' என்று, ஓரிரு ஆண்டுகளாக சீமானும் அவருடைய தம்பிகளும் மேடைக்கு மேடை ஆதாரங்களுடன் கிழித்துத் தொங்கவிட்ட பின், அறிவாலயத்திற்கு நிஜமாகவே வியர்க்கத் தொடங்கிவிட்டது. மறுபுறம், அண்ணாமலை தொடுத்த தாக்குதல், தி.மு.க.,வை நிலைகுலைய வைத்தது.

திராவிட உருட்டரான ஈ.வெ.ரா.,வை தங்கள் கட்சியின் பிதாமகன் என்று கொண்டாடும் தி.மு.க.,வினருக்கு, அதே ஈ.வெ.ராவின் புத்தகத்தில் இருந்தே சான்றுகளை எடுத்துப்போட்டு, 'செக்' வைத்தார் அண்ணாமலை. குறிப்பாக, தி.மு.க., தொண்டர்களையும் தலைவர்களையும் ஈ.வெ.ரா., எந்த அளவிற்கு தரக்குறைவாகவும் இழிவாகவும் விமர்சித்தார் என்பதை அம்பலப்படுத்தினார்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நாடு உருப்படாது என்று, அன்று சாபம் கொடுத்த ஈ.வெ.ரா.,வை, இன்று, அதே தி.மு.க., தங்களின் 'திராவிட மாடலுக்கு' பிராண்ட் அம்பாசிடராக மாற்றி வைத்திருப்பது தான் அரசியலின் ஆகச்சிறந்த முரண்.

அன்று தங்களை எதிர்த்தவரையே, இன்னும் சொல்லப்போனால், தாங்கள் எதிர்த்தவரையே இன்று தங்களின் அடையாளமாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க., இருப்பது, அவர்களின் கொள்கை பலவீனத்தையே காட்டுகிறது. அப்படி சொல்லாமல், தி.மு.க.,வினர் திறந்த மனநிலையோடு 'ப்ளெக்ஸிபிள்' ஆக இருக்கின்றனர் என்றும் சொல்லலாம்.

எவ்வளவு 'ப்ளெக்ஸிபிள்' என்றால், இப்போது தேர்தல் நேரம் என்பதால், திராவிட மாடலை ஒதுக்கிவிட்டு பக்தி மாடலில் இருக்கின்றனர். வேல் ஏந்தல், விபூதி அடித்தல், கோவில் தரிசனம் என இது நன்றாக அரங்கேறி வருகிறது. ஏன், இந்த நாத்திகர்கள், கோவில் அர்ச்சகர்களின் கால்களில் விழுந்து ஆசி கூட பெற்றுக் கொண்டு இருக்கின்றனர்.

தென் மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் ஈ.வெ.ரா., பெயர் ஓட்டுகளை பாதிக்கும் என்பதால், அதுவும் இப்போதைக்கு மூட்டை கட்டப்பட்டு விட்டது. எந்த தி.மு.க., தலைவரின் மேடையிலும் கேட்பதில்லை.

திராவிட மாடல், தி.மு.க., கூட்டணி கட்சி பிரசார மேடைகளில் அறவே கேட்பதில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோது இருந்த அதே வேகத்தில், திராவிட மாடலை தற்போது உச்சரிப்பதில்லை. கொள்கைக்காக ஆட்சி என்பதை விட, ஆட்சிக்காக கொள்கையை எப்போது வேண்டுமானாலும் கழற்றி விடலாம் என்பதற்கு திராவிட மாடலே சாட்சி.

சீமான் தம்பிகள் எழுப்பும் 'நீ தமிழனா; திராவிடனா?' என்ற கேள்விக்கு பதில் சொல்ல திராணியில்லாமல் பதுங்கும் திராவிட மாடல் எனும் இந்த சொல்லாடல், 'எக்ஸ்பயரி டேட்' முடிந்த ஒரு மருந்தை போல, மெல்ல தன் வீரியத்தை இழந்து வருகிறது என்று தான் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதில் உண்மை இல்லாமல் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us