தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டம்: முதல்வர் ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டம்: முதல்வர் ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 05, 2025 01:34 AM

விவசாயிகளை தெருவில் நிறுத்தும் வகையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரிட்டிஷார் ஆட்சியின்போது, 1894ல் உருவாக்கப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 2013 வரை இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சட்டத்தின் வாயிலாக, அரசுக்கு நிலம் தேவைப்பட்டால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அதை கையகப்படுத்திக்கொள்ளும்.
நியாயமான இழப்பீடு அதற்கான இழப்பீட்டுத் தொகையையும் அரசே நிர்ணயிக்கும். இதில் உடன்பாடு இல்லையென்றால், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்ல வேண்டும்.
நிலத்தையும் இழந்து, நிலத்துக்கான பணத்தையும் பெற முடியாமல் வழக்கு விசாரணை நீளும். எனவே, நில உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு, நியாயமான இழப்பீடு, மறுவாழ்வுக்கான உத்தரவாதம் உள்ளிட்டவற்றுக்காக, கடந்த 2013ல் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், 2023ல் தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கொண்டு வந்தது. அதாவது, 250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தேவைப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு இச்சட்டம் பொருந்தும்.
நிபுணர் குழு முடிவு ஒரு திட்டம் மாநிலத்துக்கு முக்கியமானது என்று நினைத்தால், அதை சிறப்புத் திட்டமாக அரசு அறிவிக்கும்.
நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாக அறிவிப்பு வெளியிட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினாலும், நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது.
இதில், தனியாருக்குச் சொந்தமான நிலம் இருந்தாலும் கையகப்படுத்தப்படும் என்பதால் ஆபத்தான இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன்.
- நமது நிருபர் -