குறைவான நாட்களே பிரசாரம் அமைச்சர்கள், மா.செ.,க்கள் நிம்மதி
குறைவான நாட்களே பிரசாரம் அமைச்சர்கள், மா.செ.,க்கள் நிம்மதி
ADDED : மார் 20, 2024 11:36 PM

தி.மு.க., கூட்டணியில் காங்., - ம.தி.மு.க., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., உட்பட 7 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. எந்த தொகுதியாக இருந்தாலும் தி.மு.க., போட்டியிட்டாலும் சரி, கூட்டணி கட்சி போட்டியிட்டாலும் சரி, செலவு சம்பந்தப்பட்ட தொகுதியின் பொறுப்பு அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் தலையில் தான் விடியும்.
கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க.,வின் மாவட்ட செயலாளர்களையும், அமைச்சர்களையும் கூட்டணி கட்சியினர் அணுகுவது வழக்கம். பிரசார வாகனம், உடன் வருபவர்களுக்கு சாப்பாடு செலவு, இரவு கவனிப்பு, பட்டுவாடா என தினமும் பல லட்சங்களை கபளீகரமாகி விடும்.
கட்சி தலைமைக்கு எந்தவித புகாரும் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, கேட்கும் தொகையுடன், வாகனங்களையும் கொடுத்து விடுவார்கள். தேர்தல் பிரசார நாட்கள் அதிகமாக இருந்தால் இந்த செலவு கணக்கு பல மடங்கு எகிறி விடும்.
இந்த லோக்சபா தேர்தலில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நாளில் இருந்து 18 நாட்கள் மட்டுமே பிரசாரத்திற்கு உள்ளன. பிரசார நாட்கள் மிகவும் குறைவாக இருப்பதால், செலவுகள் பெருமளவு குறையும் என மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
-நமது நிருபர்-

