தி.மு.க.,வுடன் பேசும் 'ஐவர் குழு' : தமிழக காங்.,ல் வலுக்குது எதிர்ப்பு
தி.மு.க.,வுடன் பேசும் 'ஐவர் குழு' : தமிழக காங்.,ல் வலுக்குது எதிர்ப்பு
ADDED : டிச 09, 2025 06:03 AM

மதுரை: தமிழகத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேச காங்.,ல் ஏற்படுத்தப்பட்ட ஐவர் குழு, அகில இந்திய தலைமையால் நியமிக்கப்பட்டது அல்ல; தி.மு.க., அதற்கான குழுவை அமைத்தபின் தான் காங்., குழு அறிவிக்கப்படும் என காங்., முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மதுரையில் தெரிவித்தார்.
இக்குழு குறித்து காங்., மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி ஏற்கனவே விமர்சித்த நிலையில் சுதர்சனநாச்சியப்பன் கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரலில் நடக்க உள்ள நிலையில், தி.மு.க.,வுடன் பேச்சு நடத்த தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐவர் குழுவை காங்., தேசிய தலைவர் கார்கே அமைத்ததாக தமிழக காங்., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்த குழுவில் மாநில காங்., தலைவர் அகில இந்திய செயலாளர்கள் சூரஜ், ஹெக்டே நிவேதித் ஆல்வா, சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு, விருப்ப தொகுதிகளை கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இதற்கிடையே இக்குழுவை அகில இந்திய தலைமை அறிவிக்காததாலும், தேசிய பொதுச் செயலாளர் கையெழுத்துடன் அறிக்கை வெளியாகாததாலும் மரபு மீறப்பட்டுள்ளது என தமிழக காங்., தலைவர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.
மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, ஐவர் குழுவை ஏன் வேணுகோபால் அறிவிக்கவில்லை. கூட்டணி குறித்து பேச தி.மு.க.வே, குழுவை அமைக்கவில்லை. அதற்குள் காங்., குழுவிற்கு என்ன வேலை. தேர்தல் கூட்டணி குறித்து எந்த முடிவும் டில்லி தலைமை தான் அறிவிக்கும் என விமர்சித்திருந்தார்.
இது அந்த குழு அல்ல
இந்நிலையில் மதுரையில் காங்., மாவட்ட தலைவர்களை தேர்வு செய்யும் பொறுப்புக் குழு கூட்டம் அகில இந்திய காங்., கமிட்டி பொதுச் செயலாளர் அருண் யாதவ் தலைமையில் நடந்தபோது அப்போது ஒருங்கிணைப்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறுகையில் தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கான குழு தமிழகத்தில் இனிமேல் தான் அமைக்கப்படும்.
தி.மு.க., சார்பில் அதிகாரப்பூர்வ குழுவை அறிவித்த பின் காங்., குழு விபரத்தை வேணுகோபால் வெளியிடுவார் என தெரிவித்தார். இதனால் ஐவர் குழு நியமனம் குறித்து தமிழக காங்.,ல் சந்தேகம் வலுத்துள்ளது.
காங்., மூத்த நிர்வாகிகள் கூறுகையில், 'காங்., ஐவர் குழுவை அமைத்தது யார். அகில இந்திய தலைமை அமைக்காத குழு, தி.மு.க.,வுடன் பேச்சு நடத்தியதா. இதுபோன்ற குழப்பங்களுக்கு டில்லி தலைமை தீர்வுகாண வேண்டும்,' என்றனர்.

