வழக்கம்போல் வெள்ள பாதிப்பு: ஆக்கிரமிப்பு அகற்றியதாக 'அல்வா'
வழக்கம்போல் வெள்ள பாதிப்பு: ஆக்கிரமிப்பு அகற்றியதாக 'அல்வா'
UPDATED : அக் 17, 2024 07:08 AM
ADDED : அக் 17, 2024 12:29 AM

செங்குன்றம், புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில், பல கோடி ரூபாய் மதிப்பு அரசு நிலங்கள், தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கின.
ஆக்கிரமிப்பு குறித்து, புழல் ஊராட்சி ஒன்றிய, இரண்டாவது வார்டு காங்., கவுன்சிலர் மல்லிகா மீரான், பொன்னேரி, திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். நடவடிக்கை இல்லாததால், கடந்தாண்டு முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்தார்.
இந்த பட்டியலை, பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம், கடந்த 4ம் தேதி பொன்னேரி தாசில்தாரிடம் கொடுத்து, முழு விபரம் குறித்த அறிக்கையை கேட்டுள்ளது.
புளியந்தோப்பு பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே காந்திபுரம் பகுதி பகிங்ஹாம் கால்வாயை ஒரு பக்கம் மின்வாரிய சுற்றுச்சுவரும், மறுபக்கம் வீடுகளும் ஆக்கிரமித்ததால், 40 அடிக்கும் அகலமான கால்வாய் 10 அடியாக குறைந்துள்ளது. குறிப்பாக கனகராஜ் தோட்டம், சுந்தரராஜபுரம், அன்சாரி தெரு, டிமலெஸ் சாலை போன்ற பகுதிகளில், கால்வாயை முற்றிலுமாக கபளீகரம் செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
சென்னை பேசின்பாலம் ரயில் செல்லும் பகுதியில், காந்திபுரம் வழியாக வரக்கூடிய கூவம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
அம்பத்துார் சுற்றுவட்டாரத்தில் கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த முதியவர்கள், படகுகள் வாயிலாக மீட்கப்பட்டனர்.
கொரட்டூர் வீட்டு வசதி வாரிய 25, 26வது தெருக்களிலும், 30வது மற்றும் 61வது தெருக்களிலும் பாதிப்பு அதிகமாக இருந்தது.
100 தொழிற்சாலைகள் முடக்கம்
மணலிபுதுநகர் - பொன்னேரி நெடுஞ்சாலை, ஐ.ஜே.,புரம் பகுதியில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழைநீர் வடிகால் பணி நடந்து வருகிறது. இதனால், விச்சூரில் இருந்து மழைநீர் வெளியேறும் கால்வாய்; ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த மழைநீர் வடிகால்கள் அடைக்கப்பட்டன. தொடர் மழையால் இந்த பணிகளை மேற்கொள்ள முடியவில்லை; அடைப்புக்களையும் அகற்றவில்லை.
இதன் காரணமாக, மணலி புதுநகரின் ஐ.ஜே.,புரம், எழில் நகர்; விச்சூரின் ஜெகன் நகர், அருள் முருகன் நகர், ஸ்ரீராம் நகர், மூகாம்பிகை நகர், தாமஸ் நகர் உட்பட, 10த்துக்கும் மேற்பட்ட நகர்களிலும், வீடுகளை மழைநீர் சூழ்ந்து, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
விச்சூரில் செயல்படும், சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இயங்கி வரும், கன்டெய்னர் முனையங்கள், பெயிண்ட், ரசாயனம், 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் தேங்கிய மழைநீர் வெளியேறவில்லை.
நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளாததால் அப்பகுதியை சேர்ந்தவர்களே, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, மண் அடைப்பின் ஒரு பகுதியை அகற்றியதால், மழைநீர் மெல்ல வடிகாலை நோக்கி ஓடுகிறது.