ஜி.எஸ்.டி., பதிவு: வணிகர்களுக்கு உதவ மாதம் 4 நாள் அதிகாரிகள் ஆய்வு
ஜி.எஸ்.டி., பதிவு: வணிகர்களுக்கு உதவ மாதம் 4 நாள் அதிகாரிகள் ஆய்வு
ADDED : செப் 28, 2024 02:55 AM

சென்னை: ஜி.எஸ்.டி., பதிவு செய்வது தொடர்பாக வணிகர்களுக்கு உதவவும், நேர்மையாக வணிகம் செய்வதை உறுதி செய்யவும், மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வாரத்தில் கள ஆய்வு செய்யும்படி, அதிகாரிகளை வணிக வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வணிகம் செய்வோர், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டும். தற்போதைய நிலவரப்படி, 11.50 லட்சம் வணிகர்கள் ஜி.எஸ்.டி., பதிவு செய்துள்ளனர். சிலர் அதிகளவு வியாபாரம் செய்தும், ஜி.எஸ்.டி., பதிவு செய்யாமல் உள்ளனர்.
எனவே, ஒவ்வொரு அதிகாரியும் தங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு செய்து, ஜி.எஸ்.டி., பதிவு செய்யாத வணிகர்களை பதிவு செய்ய உதவுமாறு, அதிகாரிகளை வணிக வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து, வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சில வணிகர்கள் உண்மையிலேயே, ஜி.எஸ்.டி.,க்கு எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று தெரியாமல் உள்ளனர். வேறு சிலர் வேண்டுமென்றே பதியாமல் உள்ளனர். சிலர் தொழில் செய்யவில்லை என்று தகவல் தெரிவித்து விட்டு, தொடர்ந்து வணிகம் செய்கின்றனர்.
எனவே, ஒவ்வொரு பகுதியிலும் கள ஆய்வு செய்து, இதுவரை ஜி.எஸ்.டி., பதிவு செய்யாதவர்களுக்கு உதவும்படி, ஜி.எஸ்.டி., பதிவு செய்த முகவரியில் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்யுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த ஆய்வுகளை, வணிகர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வாரங்களில், புதன், வியாழக்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.