'தி.மு.க., ஆட்சியில் திராணியற்று விட்டதா தமிழ் சமூகம்?'
'தி.மு.க., ஆட்சியில் திராணியற்று விட்டதா தமிழ் சமூகம்?'
ADDED : நவ 28, 2025 04:25 AM

சென்னை: 'தன்னை ஏற்க மறுக்கும் பெண்ணை கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு தைரியம் அளிப்பது, சீரழிந்த சட்டம் - ஒழுங்கா; கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல் துறையா?' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
திருமணத்திற்கு மறுத்ததால் தஞ்சையில் பள்ளிக்கு செல்லும் வழியில் பெண் ஆசிரியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல, சில நாட்களுக்கு முன், ராமேஸ்வரத்தில், காதலிக்க மறுத்த மாணவி ஒருவர், பள்ளி செல்லும் வழியில், கொலை செய்யப்பட்டார். அந்த ரணம் அகலாத நிலையில், மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.
தி.மு.க., ஆட்சியின் கீழுள்ள தமிழ் சமூகம், நம் பெண்களின் விருப்பு, வெறுப்பை மதிக்கக் கூட திராணியற்று விட்டதா? தன்னை மறுக்கும் பெண்ணை, கொலை செய்யும் அளவிற்கு தைரியம் அளித்தது, சீரழிந்த சட்டம் - ஒழுங்கா; கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல் துறையா?
பாலியல், கடத்தல், காதலிக்க மறுத்ததால் கொலை என, தொடரும் பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்களை கண்டு, பெண் பிள்ளைகளை பெற்றோர், வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு தவிக்கின்றனர்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் தன் மகன் பிறந்த நாளுக்கு, வாழ்த்து மடல் வாசித்து மகிழ்கிறார். இந்த லட்சணத்தில், 'அப்பா' என்ற பட்டத்திற்கு ஆசைப்படுவது வெட்கக்கேடு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

