தம்பிதுரை கல்வி நிறுவனம் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்க ஐகோர்ட் கெடு
தம்பிதுரை கல்வி நிறுவனம் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்க ஐகோர்ட் கெடு
ADDED : மார் 10, 2026 06:03 AM

சென்னை: அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து உள்ள, 2,476 ச.மீ., அரசு புறம்போக்கு நிலங்களை, 12 வாரங்களுக்குள் அகற்றுமாறு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கோணாம்பேடு கிராம பொது நல சங்க தலைவர் ஜி.கருணாநிதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோணாம்பேடு, நாராயணபுரம் போன்ற கிராமங்களில், செயின்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கலை அறிவியல் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் நடத்தப் படுகின்றன.
அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரையின் குடும்ப உறுப்பினர்கள், இந்த கல்வி அறக்கட்டளையில் அங்கம் வகிக்கின்றனர். வருவாய் ஆவணங்களில், நீர் பிடிப்பு, கல்லாங்குத்து என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, மாணவ, மாணவியருக்கான கல்லுாரி விடுதிகள், துணை மின் நிலையம், கல்லுாரி பஸ்களை நிறுத்த தனி சாலை போன்றவற்றை, செயின்ட் பீட்டர்ஸ் கல்வி நிறுவனம் அமைத்து உள்ளது.
ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, ஆவடி உயர் நிலைப் பள்ளி மற்றும் கோணாம்பேடு உள்ளிட்ட கிராமங்களின் அடிப்படை வசதிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.சுரேந்தர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எம்.பிரதாப் சார்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், 'சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனம் வசம் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை, சட்டத்துக்கு உட்பட்டு, 12 வார காலத்துக்குள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, திருவள்ளுர் மாவட்ட கலெக்டர், ஆவடி கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

