ஓசூர் ரிங்ரோடு பணி 7 ஆண்டாக இழுபறி; நெடுஞ்சாலை துறை அலட்சியத்தால் ரூ.120 கோடி முடக்கம்
ஓசூர் ரிங்ரோடு பணி 7 ஆண்டாக இழுபறி; நெடுஞ்சாலை துறை அலட்சியத்தால் ரூ.120 கோடி முடக்கம்
ADDED : டிச 26, 2024 01:05 AM

ஓசூர் : தமிழக எல்லையான ஓசூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மாநில எல்லையான ஜூஜூவாடியில் துவங்கி, அனுமேப்பள்ளி அக்ரஹாரம் உட்பட மோரனப்பள்ளி வழியாக பேரண்டப்பள்ளி வரை, 18 கி.மீ.,க்கு, அவுட்டர் ரிங்ரோடு அமைக்கப்படும் என, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்தார்.
தொடர்ந்து, 2017 டிச., 20ல் அரசாணை வெளியிடப்பட்டு, சர்வே பணி, விவசாயிகளுக்கு இழப்பீடு போன்றவற்றிற்காக, 124.96 கோடி ரூபாய் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கப்பட்டது.
நெடுஞ்சாலை துறை அலட்சியமாக இருப்பதால், 120 கோடி ரூபாய்க்கு மேல், அவர்களிடம் முடங்கியுள்ளது. இப்பணிக்காக ஒரு சில இடங்களில் மட்டுமே சர்வேயை முடித்து, கற்கள் நட்டுள்ளனர்.
இச்சாலை பணிக்காக, 120 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள்கையகப்படுத்தப்பட உள்ளன. அதற்கும்இழப்பீடு வழங்கப்படவில்லை.
தற்போதைய தி.மு.க., அரசு, ஓசூரின் அவுட்டர் ரிங்ரோடு திட்டத்தில் கவனம் செலுத்தாமல் உள்ளது. ஜெயலலிதா அறிவிக்கும் போது ஓசூரில் இருந்த நிலத்தின் மதிப்பை விட, தற்போது பல மடங்கு நில மதிப்பு உயர்ந்து விட்டது.
அத்துடன், ஜூஜூவாடி அருகே, மூன்று வீடுகள் மட்டுமே இருந்த சில தனியார் மனையில் தற்போது, 30 வீடுகள் வரை கட்டியுள்ளனர்.
அவ்வழியாக தான் சாலை செல்ல இருப்பதாக, நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஓசூர் நகரின் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஏழு ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அவுட்டர் ரிங்ரோடு திட்டம், பயன்பாட்டிற்கு வருமா என்ற கேள்வி, ஓசூர் பகுதியினர் இடையே எழுந்துள்ளது.
சாட்டிலைட் ரிங் ரோட்டில் கவனம் செலுத்தி வரும் அரசியல் கட்சிகள், ஓசூர் அவுட்டர் ரிங்ரோட்டிலும் கவனம் செலுத்தி பணியை தீவிரப்படுத்த வேண்டும்.