UPDATED : அக் 25, 2024 05:06 AM
ADDED : அக் 25, 2024 02:21 AM

திருச்சி: திருச்சி மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில், பள்ளிக் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் முட்டை மற்றும் உணவுப் பொருட்களை ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வது நடக்கிறது.
பண்ணைகளில் அழுகிய முட்டைகளை வாங்கி, பேக்கரி போன்ற உணவகங்களில் உணவுப் பொருட்கள் தயாரிப்பதும் அதிகரித்துள்ளது.
கடந்த செப்., மாதம் திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள ஹோட்டல் ரத்னாவில், தமிழ்நாடு அரசு முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள், உணவு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை, ஆம்லெட், ஆப்பாயில் தயாரிக்க பயன்படுத்தியது தெரிந்தது. அந்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி, திருச்சி, தென்னுார் ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள இரண்டு பேக்கரிகளில் சோதனை நடத்திய மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், கேக், பிரட் தயாரிப்பதற்கு வைத்திருந்த 8,000 அழுகிய முட்டைகளை கைப்பற்றி அழித்தனர்.
அதேபோல், நேற்று முன்தினம், திருச்சி மாவட்டம், முசிறி சேலம் சாலையில் உள்ள கணேசன் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தி, அங்கு உணவு தயாரிக்க வைத்திருந்த 90 அழுகிய முட்டைகளை கைப்பற்றினர்.
அப்போது, அந்த ஹோட்டலுக்கு விற்பனை செய்வதற்காக, சதாசிவம் என்பவர் டூ-வீலரில் எடுத்து வந்த 900 முட்டைகளையும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கைப்பற்றி அழித்தனர்.
மேலும், ஹோட்டலுக்கு 'சீல்' வைத்த அலுவலர்கள், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அழுகிய முட்டைகள் விற்பனை செய்தவர் ஆகியோர் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.