நாங்கள் விசில் ஊதுபவர்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி
நாங்கள் விசில் ஊதுபவர்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி
UPDATED : பிப் 24, 2026 05:55 AM
ADDED : பிப் 24, 2026 05:37 AM

சென்னை: ''கொள்ளையடித்த பணத்தில் பங்கு கொடுத்து, கல்லாப்பெட்டி கூட்டணியை தி.மு.க., அமைத்திருக்கிறது,'' என த.வெ.க., தலைவர் விஜய் விமர்சித்தார்.
வேலுாரில் நேற்று நடந்த நிர்வாகிகள் சந்திப்பில் விஜய் பேசியதாவது: மக்களை நேசிக்கும் தலைமை இல்லை. இதனால் தான், ஸ்டாலினின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாறுகின்றனர். உங்களை ஊருக்கு வந்து சந்திக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால், நமக்கு எதிராக பல சூழ்ச்சிகள் நடக்கின்றன.
த.வெ.க., ஆட்சி அமைந்த பின், ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து சந்திப்பேன். 'தமிழகம் - டில்லி இடையிலான தேர்தல் இது' என ஸ்டாலின் உருட்டுகிறார். பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போகிறாரா ஸ்டாலின்?
இந்த தேர்தல், மக்கள் - ஊழல் தி.மு.க., இடையிலான போர். சீரியஸாக போட்டி நடக்கும்போது, காமெடிக்கு நேரமில்லை. ஸ்டாலின் சொல்வது போல, இது 'சூப்பர் ஸ்டார்' மாநிலமல்ல; 'சூப்பர் ஸ்டாண்ட் அப் காமெடியன்' ஆட்சி நடக்கும் மாநிலம். மக்கள் என்னுடன் நிற்கும் கோபத்தில், ஒட்டுமொத்தமாக எல்லாரும் சேர்ந்து என்னை எதிர்க்கின்றனர்.
எதையாவது செய்து சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற, சிலர் பிரச்னைகளை கிளப்புகின்றனர். அரசியல் கட்சிகளும், தலைவர்களும் சில நேரங்களில் அமைதியாக இருந்தாலே எந்த பிரச்னையும் வராது.
'இந்த விஜய் எங்க போனாலும், சட்டம் - ஒழுங்கை பற்றியே பேசி, மக்களுக்கு ஞாபகப்படுத்துகிறான்' என முதல்வர் சொல்லி சங்கடப்பட்டுள்ளார். நாங்கள் விசில் ஊதுபவர்கள்; எப்படி அமைதியாக இருக்க முடியும்?
தி.மு.க.,வின் அடாவடிக்கு முடிவு கட்ட, 'சுவிட்ச் ஆப்' செய்யும் 'ரிமோட்' தான் இந்த தேர்தல். அறிவாலயம் பக்கம் யார் நடந்து போனாலும், நிழலுக்கு ஒதுங்கினாலும், கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறார் ஸ்டாலின்; கொள்ளையடித்த பணத்தில் பங்கும் கொடுக்கிறார். அதனால் தான் தி.மு.க., கூட்டணிக்கு, 'கல்லாப்பெட்டி கூட்டணி' என பெயர் வைத்திருக்கிறேன்.
அந்த கல்லாப்பெட்டி கூட்டணி இனி வெற்றி பெற முடியாது. விசில் புரட்சி செய்யும்; வரும் தேர்தலில், த.வெ.க., தான் வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

