பன்னீர்செல்வத்தை எப்படி பயன்படுத்துவது? தடுமாற்றத்தில் தி.மு.க., தலைமை
பன்னீர்செல்வத்தை எப்படி பயன்படுத்துவது? தடுமாற்றத்தில் தி.மு.க., தலைமை
ADDED : ஜன 26, 2026 05:39 AM

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தால் அரசியல் ஆதாயம் கிடைக்குமா என, தி.மு.க., தலைமை குழப்பம் அடைந்துள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், மீண்டும் கட்சியில் சேர முயற்சித்தார். பா.ஜ., மேலிடமும் முயற்சித்தது. ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அவரை சேர்க்க மறுத்து விட்டார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அடுத்து என்ன செய்வது என தெரியாமல் பன்னீர் செல்வம் திணறி வருகிறார். இதனால் அதிருப்தி அடைந்த அவரது ஆதரவாளர்கள், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., என செல்கின்றனர்.
புதிதாக கட்சி துவக்கி, அ.தி.மு.க., கூட்டணியில் இணையும் படி, பன்னீர்செல்வத்திடம் பா.ஜ., தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், புதிய கட்சி துவக்க, அவர் தயங்குகிறார். நடிகர் விஜயின் த.வெ.க.,வில் இணையுமாறு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விடுத்த அழைப்பையும், பன்னீர்செல்வம் நிலுவையில் வைத்துள்ளார்.
இதற்கிடையே, தி.மு.க., கூட்டணியில் இணையுமாறு, அமைச்சர் சேகர்பாபு வாயிலாக பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தால், பழனிசாமி சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிடும் என பன்னீர்செல்வம் தயங்குகிறார்.
இந்நிலையில், தி.மு.க., கூட்டணிக்கு பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்தால், கிடைக்கும் சாதக, பாதகங்கள் குறித்து தி.மு.க., தலைமை ஆலோசித்து வருகிறது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட, தென் மாவட்டங்களில், முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் உள்ளன. இவை, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா விசுவாசிகளின் ஓட்டுகள். தி.மு.க., கூட்டணிக்கு பன்னீர்செல்வம் ஆதரவளித்தால், அந்த ஓட்டுகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு வேளை, தேர்தலில் இருந்து பன்னீர் ஒதுங்கினால், அது அ.தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளாக மாறி, தி.மு.க.,விற்கு கிடைக்க வாய்ப்புள்ளது. சமீபத்தில் பன்னீர்செல்வம் ஆதரவாளரான, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தி.மு.க.,வில் சேர்ந்தார்.
இதனால், டெல்டா மாவட்டங்களில் பலன் கிடைக்குமா என, தி.மு.க., சார்பில் எடுக்கப்பட்ட சர்வேயில், அ.தி.மு.க., ஆதரவு ஓட்டுகள், தி.மு.க.,விற்கு ஓரளவுக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிய வந்துள்ளது.
இதனால், தென் மாவட்டங்களில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தற்போது இருக்கும் ஆதரவு குறித்து, தீவிரமாக விபரங்களை திரட்டி வருகிறது தி.மு.க., இதனாலேயே, பன்னீர்செல்வம் விஷயத்தில் என்ன முடிவெடுப்பது என புரியாமல் தி.மு.க., தடுமாறி வருகிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

