UPDATED : ஏப் 17, 2025 03:33 AM
ADDED : ஏப் 16, 2025 06:17 PM

சென்னை:'இண்டி கூட்டணி என்பது, காங்கிரஸ் தலைமையிலான ஒரு ஊழல் குழு; அதில், நாடு முழுதும் உள்ள ஊழல் கட்சிகள் கைகோர்த்துள்ளன' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
காங்கிரஸ் கட்சி ஊழலில் தலைசிறந்தது. சுதந்திரப் போராட்ட வீரர்களால் நிறுவப்பட்ட நிறுவனத்தால் கூட, நேரு குடும்பத்தின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை. 5,000க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் இணைந்து, 1930 காலகட்டத்தில், 'அசோசியேட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தை துவக்கினர். இந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட, 'நேஷனல் ஹெரால்டு' செய்தித்தாள், சுதந்திரப் போராட்டத்தை முதன்மையாக வெளியிட துவக்கப்பட்டது.
ஆனால், அதன் இயக்குநராக பணியாற்றிய நேரு, அவரது மகள் இந்திராவை விளம்பரப்படுத்த அச்செய்தித்தாளை பயன்படுத்தினார். நேரு குடும்பத்தின் தவறான கொள்கைகளை விமர்சிப்பவர்களை தாக்கி செய்தி வெளியிட, ஓர் அரசியல் கருவியாகவும் இதை பயன்படுத்தினர். கடந்த 1990 - 2008 இடையில் காங்கிரஸ் கட்சி, அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு, 90 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக வழங்கியது.
இந்நிறுவனம், கடந்த 2008ல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால், அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டியிருந்தது. இது, நேரு குடும்பத்தின் ஊழல்வாதிகள், நேஷனல் ஹெரால்டின் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை கையகப்படுத்த, தங்கள் நடவடிக்கையை துவக்கியபோது நடந்தது. பின், கடந்த 2010ல், 'யங் இந்தியா' நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது.
இதில் சோனியா மற்றும் ராகுல், 76 சதவீத பங்குகளை வைத்திருந்தனர். சில மாதங்களுக்கு பின் காங்கிரஸ், நேஷனல் ஹெரால்டின் 90.21 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை, வெறும் 50 லட்சம் ரூபாய்க்கு யங் இந்தியாவுக்கு மாற்றியது. நேஷனல் ஹெரால்டு கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்ததால், அது தன் பங்குகளை, யங் இந்தியாவுக்கு மாற்றியது. நேரு குடும்பம், 2,000 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்துக்களை, 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் தன்னகத்தே வைத்திருந்தது.
'இண்டி' கூட்டணி என்பது காங்கிரஸ் தலைமையிலான ஒரு ஊழல் குழு.
இதில், நாடு முழுதும் உள்ள ஊழல் கட்சிகள் கைகோர்த்துள்ளன. சுதந்திர இயக்கத்திற்காக நிறுவப்பட்ட ஒரு நிறுவனத்தை, ஊழல் நிறைந்த அமைப்பாக மாற்றி, பின், அதை முழுதும் கையகப்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் தற்போது, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க துவங்கி உள்ளது. இதற்காக, காங்கிரஸ் கட்சியும், நேரு குடும்பமும், வெட்கி தலைகுனிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.