எம்.பி., தர்மருக்கு ஒரு நீதி பன்னீருக்கு ஒரு நீதியா?
எம்.பி., தர்மருக்கு ஒரு நீதி பன்னீருக்கு ஒரு நீதியா?
ADDED : ஜன 25, 2026 05:28 AM

சென்னை: பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி., தர்மர், சென்னையில் நேற்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, அவரது ஆதரவாளராக மாறினார்.
அ.தி.மு.க-வில் பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே, கடந்த 2022-ம் ஆண்டு ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தது. அது தீவிரமாக மாற, பன்னீர் தன் ஆதரவாளரான முதுகுளத்துார் தர்மருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்டது தான் காரணம்.
பன்னீர் கேட்டபடி, தர்மருக்கு எம்.பி., பதவி கிடைத்தது. ஆனால், உட்கட்சி பிரச்னை தீவிரமாகி, பன்னீர் உள்ளிட்ட பலரை, கட்சியிலிருந்தே நீக்கினார் பழனிசாமி. இருப்பினும், தர்மரையும், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பனையும், அவர் கட்சியில் இருந்து நீக்கவில்லை.
பன்னீர் ஆதரவாளராகவே தொடர்ந்த தர்மர், சென்னையில் நேற்று மாலை, பழனிசாமியை சந்தித்து, அவரது ஆதரவாளராக மாறினார்.
இதுகுறித்து, தர்மர் கூறியதாவது:
நான் இப்போதும் அ.தி.மு.க., - எம்.பி., தான். தீயசக்தி தி.மு.க-வை அகற்ற வேண்டும் என்பதற்காகவே, பழனிசாமியை சந்தித்து ஆதரவு கொடுத்தேன். பன்னீருக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நான் தன்னிச்சையாக தான் இந்த முடிவை எடுத்தேன். பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
பழனிசாமியை தர்மர் சந்தித்தது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறும்போது, ''பன்னீரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று குரல் எழும்பும் போதெல்லாம், எம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சியின் தலைமை அலுவலகத்தை அடித்து உடைத்தவரை, எப்படி கட்சியில் சேர்க்க முடியும் என்று தான் பழனிசாமி விளக்கம் கொடுப்பார்.
''ஆனால், அந்த கலவர சம்பவத்துக்கு, முதுகுளத்துாரில் இருந்து ஆட்களை இறக்கியதே தர்மர் தான். அவரை இன்று, கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து பழனிசாமி சந்திக்கிறார். ஆக, பழனிசாமி கோர்ட்டில் தர்மருக்கு ஒரு நீதி; பன்னீர்செல்வத்துக்கு ஒரு நீதியா? பழசையெல்லாம் மறந்து பன்னீர்செல்வத்தையும் அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டு, கட்சியை வலிமைப்படுத்த வேண்டும்,'' என்றனர்.

