மே.வங்கத்தில் மம்தா ஆதிக்கம் சரிகிறதா? 15 ஆண்டு ஆட்சியை அசைக்கும் ஆசிரியர்கள்
மே.வங்கத்தில் மம்தா ஆதிக்கம் சரிகிறதா? 15 ஆண்டு ஆட்சியை அசைக்கும் ஆசிரியர்கள்
ADDED : மே 16, 2025 11:31 PM

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், உச்ச நீதிமன்றத்தால் 25,000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட விவகாரம், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பெரும் சவாலாக எழுந்துள்ளது.
மேற்கு வங்கத்தில், 2011 முதல் தொடர்ந்து மூன்று சட்டசபை தேர்தல்களில் வென்று, 15 ஆண்டுகளாக முதல்வராக இருக்கிறார், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி.
கண்காணிப்பு
சாரதா சிட்பண்ட் ஊழல், நிலக்கரி முறைகேடு, கால்நடை கடத்தல், பொது வினியோக திட்ட குளறுபடி என ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டு, 'ஹாட்ரிக்' முதல்வராக தொடர்கிறார். 2011ல் காங்., 2016ல் மார்க்சிஸ்ட் கம்யூ., 2021ல் பா.ஜ., என எதிர்க்கட்சிகள் மாறினாலும், ஆளுங்கட்சியாக திரிணமுல் காங்., மாறவில்லை.
இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகியவற்றுடன் மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.
அதில், மம்தா ஆதிக்கத்துக்கு தடை போடும் விதமாக ஆசிரியர் நியமன முறைகேடு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவரது கடந்த ஆட்சியில், கட்சியினர் லட்சக்கணக்கில் பணம் பெற்று, ஆசிரியர்களை நியமித்தனர்.
வழக்கை விசாரித்த கொல்கட்டா உயர் நீதிமன்றம் 25,000 பேரின் நியமனத்தை ரத்து செய்தது. இந்த உத்தரவை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த 25,000 பேரும் ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டதால், முறையான தகுதியில் வேலை பெற்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய ஆசிரியர் தேர்வு பணியை முழுக்க முழுக்க உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும்.
ஏற்கனவே, பணம் கொடுத்து வேலை வாங்கிய யாரையும் விண்ணப்பிக்க அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றம் 'கறார்' காட்டியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, 'வேலை இழந்த 25,000 பேரின் குடும்பங்களும் மம்தாவுக்கு எதிராக கடும் கொந்தளிப்பில் இருக்கின்றன. அவர்களின் சாபம், சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்' என்கிறார், பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி.
ஒவ்வொரு தாலுகாவிலும் 'டிஸ்மிஸ்' ஆசிரியர்கள் இருப்பதால், வறுமையில் வாடும் அவர்களின் நிலைமையை உள்ளூர் ஊடகங்களும், சமூக வலைதளங்களும் தொடர்ந்து வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
சிலர் தற்கொலை செய்ததால், அந்த குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. பள்ளி கல்வி நிலைமை பாதாளத்தை நோக்கி செல்லும் நிலையில், பல அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மட்டுமே இருக்கின்றனர். எப்படி பாடம் நடத்துவது; தேர்வுகளை நடத்துவது? என தெரியாமல் தவிக்கின்றனர்.
கரை சேருவாரா?
சமூக, பொருளாதார ரீதியில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் இந்த விவகாரத்தால், மம்தா பானர்ஜிக்கு சோதனை காலம் துவங்கி விட்டதாக கூறினாலும், கடைசி நேரத்தில் அவர் மாற்றி விடுவார் என கட்சியினர் நம்புகின்றனர்.
ஆனால், ஆசிரியர் நியமனத்தில் பணம் வாங்கியது உட்பட பல வழக்குகளில் மம்தா கட்சியினர் மீது அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., போன்றவற்றை மிக வேகமாக பா.ஜ., முடுக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தனை எதிர்ப்பலைகளையும் கடந்து, நான்காவது முறையாக மம்தா கரை சேருவாரா என்பதே மேற்கு வங்கத்தின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
- -நமது சிறப்பு நிருபர்- -