ADDED : டிச 03, 2025 05:11 AM

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க.,வை சேர்க்கும் முயற்சியில், பா.ஜ., மேலிடத்திற்கு சாதகமான பதில் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில், தே.மு.தி.க.,வை சேர்க்க, அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதாவிடம், டில்லி பா.ஜ., மேலிடத் தலைவர்கள் தொடர்ந்து பேச்சு நடத்தினர்.
பிடிகொடுக்காத பிரேமலதா, 'உடனடியாக கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது; சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் முடிவெடுத்து அறிவிப்போம்' என கூறினார்.
இந்த சூழலில், த.வெ.க.,வால் தங்களுக்கு வரும் ஓட்டுகள் சிதறலாம் என்பதை கணித்துள்ள தி.மு.க., தலைமை, அதை சரிக்கட்ட தே.மு.தி.க.,வை தி.மு.க., கூட்டணிக்கு இழுக்க முயன்றது. இதை அறிந்ததும், தே.மு.தி.க., தலைமையிடமும், விஜயகாந்த் உறவினர்களிடமும் பா.ஜ., மேலிட தலைவர்கள் பேச்சு நடத்தியுள்ளனர்.
அப்போது, தே.மு.தி.க.,வுக்கு 20 தொகுதிகளுடன் ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்கவும் பா.ஜ., உதவுவதாக கூறியுள்ளது. இதற்கு, தே.மு.தி.க., தலைமை உடன்படத் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

