கலைஞர் கருணாநிதி நகரானது ஜெ., நகர்; மக்கள் கொதிப்பு
கலைஞர் கருணாநிதி நகரானது ஜெ., நகர்; மக்கள் கொதிப்பு
UPDATED : மார் 16, 2024 09:13 AM
ADDED : மார் 15, 2024 10:16 PM

ப.வேலுார்:ஜெ.நகர் மக்களுக்கு கலைஞர் கருணாநிதி நகர் என பட்டா வழங்கியதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே படமுடிபாளையத்தில், கடந்த, 2010ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது, 74 பேருக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது.
அதற்கு, 'ஜெ., அம்மா நகர்' என, பெயரிட்டனர். இந்த இலவச வீட்டுமனைக்கு கடந்த வாரம், ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகம் வீட்டு வரி ரசீது போட்டுக்கொடுத்தனர்.அந்த இலவச மனைக்கு பட்டா வேண்டி, பரமத்தி வேலுார் தாலுகா அலுவலகத்தில், 74 பேரும் ஒன்றாக விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கு பட்டா வழங்க, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ஆணை பிறப்பித்து, நேற்று திருச்செங்கோடு தனியார் கல்லுாரியில் நடந்த அரசு விழாவில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இதற்காக, அந்த குடியிருப்பில் உள்ள குடும்பத்தாரிடம், தலா, 1,300 ரூபாய் வீதம் வசூலித்தனர். அப்பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பாலசுப்பிரமணியன், 45, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிடம் புகார் மனு அளித்தார். இந்த மனுவை விசாரிக்க அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.இதையடுத்து, வசூல் செய்த பணத்தை, அதிருப்தியடைந்த சில குடும்பத்தினருக்கு மட்டும் திருப்பி வழங்கினர்.
மேலும், 'ஜெ., அம்மா நகர்' என வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர்ப் பலகையை அகற்றி விட்டு, 'கலைஞர் கருணாநிதி நகர்' என பெயர் மாற்றி, வேறு பலகை வைத்தனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:
இப்பகுதியில் வசிக்கும் மக்களின் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட சான்றிதழ்களில், 'ஜெ., அம்மா நகர்' என முகவரி உள்ளது. தற்போது, தி.மு.க., வினர், 'ஜெ., அம்மா நகர்' என்ற போர்டை மாற்றி, 'கலைஞர் கருணாநிதி நகர்' என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
இதனால், ஆதார் மற்றும் அரசு அளிக்கும் அனைத்து சான்றிதழ்களிலும் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, பழைய பெயரான, 'ஜெ., அம்மா நகர்' என்ற பெயரையே மீண்டும் வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

