ADDED : ஜன 24, 2026 02:45 AM

சென்னை: அ.தி.மு.க.,வில், மூத்த நிர்வாகிகளான சீனிவாசன், விஸ்வநாதன் உள்ளிட்டோரை, இந்த தேர்தலில் ஓரங்கட்ட, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி முடிவு எடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., அமைப்பு செயலர்கள் சிலர் கூறியதாவது: அ.தி.மு.க., பொருளாளரான சீனிவாசன், திண்டுக்கல் எம்.எல்.ஏ.,வாகவும், துணை பொதுச்செயலர் விஸ்வநாதன், நத்தம் எம்.எல்.ஏ-.,வாகவும் இருக்கின்றனர். அதேபோல, அமைப்புரீதியாக திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டச் செயலர்களாகவும் இருக்கின்றனர்.
இருவருக்கும் 75 வயதை தாண்டி விட்டதால், திண்டுக்கல்லில் தி.மு.க-.,வுக்கு இணையாக அரசியல் செய்ய முடியவில்லை. இதனால், திண்டுக்கல் மாவட்ட அரசியலில் அ.தி.மு.க., பெரும் பின்னடைவை சந்திக்கிறது.
தேர்தலுக்கு முன், இருவரின் தலைமை கழக பதவிகளை மட்டும் வைத்துவிட்டு, மாவட்டச் செயலர் பதவிகளை பறிக்க பழனிசாமி முடிவெடுத்தார். ஆனால், கட்சிக்குள் பெரும் அதிருப்தியை உருவாக்கும் என்பதால், அதை தற்காலிகமாக ஒத்திவைத்து விட்டார்.
ஆனாலும், இப்பிரச்னையை சரி செய்யாவிட்டால், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு 'சீட்' கூட தேறாது என, சில சர்வே முடிவுகள் பழனிசாமிக்கு கிடைத்திருக்கின்றன. அதன் அடிப்படையில், சீனிவாசனுக்கும், விஸ்வநாதனுக்கும் மீண்டும் சீட் கொடுக்க வேண்டாம் என, முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், 'இது எங்களின் கடைசி தேர்தல். இந்த முறை மட்டும் சீட் கொடுங்கள்' என, இருவரும் பழனிசாமியிடம் கேட்டுள்ளனர்.
அதேபோல, முன்னாள் சபாநாயகரும், அவிநாசி எம்.எல்.ஏ-.,வுமான தனபால், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி உள்ளிட்ட பல சீனியர்களுக்கும் கல்தா கொடுக்க விரும்புகிறார் பழனிசாமி.
குறிப்பாக, தனி தொகுதிகளில் எம்.எல்.ஏ-.,-வாக இருக்கும் பலருக்கும் மீண்டும் வாய்ப்பு தரப்படாது என தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

