வசனகர்த்தாவின் காகிதத்தை வைத்து அரசியல் செய்யும் கமல்: பா.ஜ., கிண்டல்
வசனகர்த்தாவின் காகிதத்தை வைத்து அரசியல் செய்யும் கமல்: பா.ஜ., கிண்டல்
ADDED : பிப் 06, 2026 05:08 AM

சென்னை: 'யாரோ எழுதி கொடுத்த பொய் வசனங்களை, அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல், அப்படியே ஒப்பித்து வசமாக சிக்கிக் கொண்டீர்கள்' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை, தமிழக பா.ஜ., கிண்டல் செய்துள்ளது.
பா.ஜ., வெளியிட்டுள்ள அறிக்கை: தன்னை ஈ.வெ.ராமசாமியின் கொள்ளு பேரன் என மார்தட்டிக் கொண்ட கமல், திரைப்படங்களில் வசனகர்த்தா எழுதிக் கொடுக்கும் வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்பித்து பழகி போயிருக்கலாம். அந்த வசனங்களில் உண்மை இருக்கிறதா என்று ஆராயும் பழக்கம் எப்போதுமே இருந்ததில்லை.
அதன் வெளிப்பாடு தான் ராஜ்யசபாவில் கமலின் முதல் உரை. யாரோ எழுதி கொடுத்த பொய்யான வசனங்களை, அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் அப்படியே ஒப்பித்து வசமாக சிக்கிக் கொண்டீர்கள்.
தமிழ் மொழி குறித்து, உங்கள் கொள்ளு தாத்தா ஈ.வெ.ராமசாமி பேசிய இழிவான கருத்துகளை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டியது வரலாற்று உண்மை. அதை, அமைச்சரின் சொந்த கருத்து என்று பார்லிமென்டில் பொய் பேசியது, அதுவும் முதல் பேச்சிலேயே பேசியது பெரும் கண்டனத்திற்கு உரியது.
உங்கள் கொள்ளு தாத்தா ஈ.வெ.ராமசாமியின் பேச்சுகளை கூட சரியாக படிக்காமல், வெறும் வசனகர்த்தாக்கள் கொடுத்த காகிதத்தை வைத்து அரசியல் செய்யும் உங்களை, பார்லிமென்டுக்கு அனுப்பிய தி.மு.க., கூட்டணி கட்சியை என்னவென்று சொல்வது?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

