கமலை தி.மு.க., - எம்.பி.,யாக்க முதல்வர் ஸ்டாலின் விருப்பம்
கமலை தி.மு.க., - எம்.பி.,யாக்க முதல்வர் ஸ்டாலின் விருப்பம்
ADDED : மே 27, 2025 04:57 AM

சென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை, தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக்க, முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் கமல், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கடந்த 2018ல் துவக்கினார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட்டு, 4 சதவீத ஓட்டுகளைப் பெற்றார்.
அடுத்து, 2021 சட்டசபை தேர்தலில், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தார்.
எனினும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமலும், தோல்வியை தழுவினார். அதன்பின், தி.மு.க., ஆதரவு நிலை எடுத்த கமல், 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை.
தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். அப்போது ம.நீ.ம.,வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படும் என, தி.மு.க., உறுதி அளித்து, உடன்பாடு செய்து கொண்டது.
அதன்படி, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை, அக்கட்சிக்கு தி.மு.க., வழங்க வேண்டும். தி.மு.க.,வுக்கு கிடைக்கும், நான்கு எம்.பி., பதவிகளில் ஒன்றை, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ எதிர்பார்க்கிறார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு, அவர் தொடர்ந்து ஆதரவளிப்பதால், வைகோவுக்கு எம்.பி., பதவி கொடுக்க வேண்டிய நிலையில், தி.மு.க., உள்ளது. ராஜ்யசபாவில் இப்போது, தி.மு.க., 10 எம்.பி.,க்களுடன் நான்காவது பெரிய கட்சியாக உள்ளது.
இப்போது மூன்று எம்.பி.,க்களின் பதவி காலம் முடிவதால், மீண்டும் மூன்று பேரை எம்.பி.,யாக்கி, 10 எண்ணிக்கையை தக்கவைக்க, தி.மு.க., விரும்புகிறது. கமல், வைகோ இருவருக்கும், எம்.பி., பதவி கொடுத்தால் தி.மு.க.,வின் பலம் ஒன்பதாக குறைந்து விடும்.
எனவே, கமலை தி.மு.க., கணக்கில் எம்.பி.,யாக்க, முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாகவும், அதற்கான பேச்சு கடந்த சில மாதங்களாகவே நடந்து வருவதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அமைச்சர்கள் சிலர், கமலுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், தி.மு.க., ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எம்.பி.,யாகவே கமல் விரும்புவதால், இந்த விஷயத்தில் கமலை எப்படி சமாதானப்படுத்துவது என புரியாமல், தி.மு.க., தலைமை தடுமாறுவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.