டில்லியில் கனிமொழி ஹிந்தி பேசுகிறார்; மத்திய அமைச்சர் முருகன் தகவல்
டில்லியில் கனிமொழி ஹிந்தி பேசுகிறார்; மத்திய அமைச்சர் முருகன் தகவல்
ADDED : மார் 10, 2025 06:36 AM

சென்னை: 'இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க, பேச்சு நடந்து வருகிறது' என, மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
சென்னை, நங்கநல்லுாரில் பா.ஜ., அலுவலகத்தை திறந்து வைத்து, அவர் அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ளன. அதற்க தயாராக வேண்டும். மத்திய அரசின் சாதனைகளை, தி.மு.க., அரசின் தோல்வியை, மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். வரும் 2026 தேர்தல், நமக்கான தேர்தல். இந்த தேர்தலில் பா.ஜ., கூட்டணி ஆட்சியை பிடிக்கும். மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு, ரயில்வே, வங்கி தேர்வுகளை, தமிழில் எழுத நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பா.ஜ.,தான். திருக்குறளை 35 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளோம். காசி தமிழ் சங்கமம் நடத்துகிறோம். காங்கிரஸ்- தி.மு.க., கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, தமிழுக்கு எதையும் செய்யவில்லை. கனி மொழி டில்லியில் ஹிந்தி பேசுகிறார். மேகதாது அணை விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுமுக தீர்வு காணும்.
மீனவர்கள் நலனுக்காக, தனி அமைச்சகத்தை பிரதமர் கொண்டு வந்தார். மீனவர்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, கடந்த 10 ஆண்டுகளில், 40,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பாக் ஜல சந்தி பகுதியில், மீன் வளத்தை பெருக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர்கள் வளர்ச்சிக்காக, பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறோம். மீனவர்கள் பல்வேறு காரணங்களுக்காக, திசை மாறி எல்லை தாண்டும்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர்.
வெளியுறவுத் துறை அதிகாரிகள், உடனடியாக அவர்களை மீட்க, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். படகுகளை மீட்க பேச்சு நடந்து வருகிறது. தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பா.ஜ., சார்பில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். இதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.