ADDED : பிப் 03, 2024 06:49 AM

கோவை: சிறுவாணியில், 26 அடிக்கு தண்ணீர் இருந்தும் கடந்த ஒரு வாரமாக தினமும் சராசரியாக, 3.7 கோடி லிட்டருக்கும் குறைவாகவே தண்ணீர் வழங்கி, கேரள அரசு வஞ்சித்து வருகிறது. கோடையில், கோவை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மக்களுக்கு சிறுவாணி, பவானி, அத்திக்கடவு உள்ளிட்ட நீராதாரங்கள் வாயிலாக குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு, முக்கிய ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது.
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த நீர் தேக்க உயரம், 50 அடி. இரு மாநில ஒப்பந்தப்படி, கோவை மக்களின் குடிநீர் ஆதாரத்துக்கு தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீரை கேரள அரசு தர வேண்டும்.
ஆனால், பருவ மழை சமயத்தில், 45 அடிக்கு மேல் தண்ணீர் தேங்காது கேரள அதிகாரிகள் ஆற்றில் வெளியேற்றுகின்றனர். தற்போது மழை இல்லாததால் சிறுவாணி அணையின் நீர்மட்டம், 26 அடியாக இருந்து வருகிறது.
கேரளா வசம் கட்டுப்பாடு
சிறுவாணி பராமரிப்பானது, கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள் வசம் உள்ளது. அணையில் தண்ணீர் எடுக்கும் நீர்புகு கிணற்றில் நான்கு வால்வுகளும், அவர்களது கட்டுப்பாட்டில் இருக்க, கடந்த ஒரு வாரமாக தினமும், 3.7 கோடி லிட்டர் மட்டுமே கோவைக்கு வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.
ஆழியாற்றில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் வழங்கும் விஷயத்தில் தமிழக அரசை பணியவைக்கவே இப்படி ஓரவஞ்சனையுடன் நடந்துகொள்வது தெரியவந்துள்ளது.
பொள்ளாச்சி, ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு ஆண்டுக்கு, 7.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்கப்படுகிறது.
தற்போது மழை இல்லாத சூழலிலும், கேரளாவின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு, 230 கன அடி தண்ணீர் வழங்கப்படுகிறது. இதை மனதில் வைத்து, சிறுவாணியில் தண்ணீர் இருந்தும் தர மறுப்பதாக குமுறல்கள் எழுகின்றன.
கடந்தாண்டு பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டியது. இப்படி நதி நீர் பங்கீட்டில் கேரள அரசு பலவிதங்களில் ஓரவஞ்சனையுடன் நடந்துகொள்வது, தமிழகத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

