கொல்லிமலை நீர்மின் திட்ட பணி தாமதத்தால் ரூ.250 கோடி வீண்
கொல்லிமலை நீர்மின் திட்ட பணி தாமதத்தால் ரூ.250 கோடி வீண்
UPDATED : பிப் 08, 2025 04:15 AM
ADDED : பிப் 08, 2025 12:21 AM

சென்னை:கொல்லிமலை நீர்மின் நிலையத்தின் கட்டுமான பணியை, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காமல் தாமதப்படுத்தி வருவதால், திட்டச்செலவு, 339 கோடியில் இருந்து, 591 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோவில் அருகே, ஆகாய கங்கை அருவி உள்ளது. அருவி நீரை, சிறு அணைகள், சுரங்க வழித்தடம் அமைத்து, திருச்சி மாவட்டம் புளியஞ்சோலைக்கு எடுத்து வர முடிவு செய்யப்பட்டது.
அந்த தண்ணீரை பயன்படுத்தி, புளியஞ்சோலையில் கொல்லிமலை நீர்மின் நிலையம் அமைத்து, மின் உற்பத்திக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது.
புளியஞ்சோலையில், 20 மெகாவாட் திறனில், கொல்லிமலை நீர்மின் நிலையம் அமைக்கும் பணிக்கான ஆணை, தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம், 2016 டிசம்பரில் வழங்கப்பட்டது.
திட்டச்செலவு, 338 கோடி ரூபாய். கொல்லிமலை மின் நிலையத்தில், 2021 ஏப்ரலில் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை, 66 சதவீத பணிகளே முடிவடைந்துள்ளன.
கட்டுமான பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்காததால், கொல்லிமலை மின் திட்டத்திற்கான திட்டச்செலவு, 591 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிதி நெருக்கடியால், மத்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கடன் வாங்கி தான், மின் வாரியம் திட்டங்களை செயல்படுத்துகிறது.
குறித்த காலத்தில் பணிகளை முடிக்காததால், வட்டி அதிகரிக்கிறது. கொல்லிமலை மின் திட்டத்திற்கு கூடுதலாக, 252 கோடி ரூபாய் செலவாகும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகளை முடுக்கி விடுவதுடன், தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.