தாமதமாக சாகுபடி செய்த பயிர்களே பாதிப்பு: அரசிடம் வேளாண் துறையினர் அறிக்கை
தாமதமாக சாகுபடி செய்த பயிர்களே பாதிப்பு: அரசிடம் வேளாண் துறையினர் அறிக்கை
UPDATED : அக் 31, 2025 07:07 AM
ADDED : அக் 31, 2025 12:30 AM

சென்னை: 'தாமதமாக சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்கள்தான், மழையில் பாதிக்கப்பட்டுள்ளன' என, வேளாண் துறையினர் அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், 6.50 லட்சம் ஏக்கரில், குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டது. 4 லட்சம் ஏக்கருக்கு மேல், அறுவடை முடிந்த நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கியது.
இதனால், 1.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியும், காற்றில் சாய்ந்தும், நெல் மணிகள் முளைத்தும் பாதிக்கப்பட்டன.
'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா' என்ற கவலையில் விவசாயிகள் தவித்தனர். குறுவை பயிர் பாதிப்பிற்கான காரணம் குறித்து, வேளாண்துறையிடம் அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
அதை ஏற்று, வேளாண் துறை சார்பில், விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டெல்டா மாவட்டங்களில், குறுவை தொகுப்பு திட்டம் வாயிலாக வழங்கப்பட்ட சலுகைகளை பெற்ற விவசாயிகள் சிலர், தாமதமாக ஜூலை மாதத்தில் சாகுபடி செய்துள்ளனர். பயிர் விளைவதற்கு 90 நாட்கள் தேவை.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக, அவர்களால் அறுவடை செய்ய முடியவில்லை.
இது குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.
தற்போது, பயிர்களை அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மகசூல் இழப்பு உறுதி செய்யப்பட்டால், பயிர் காப்பீடு செய்துஉள்ள விவசாயிகளுக்கு, இழப்பீடு கிடைக்கும். இதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பா.ஜ., தலைவர்
லாரி உரிமையாளர்களின் போராட்டத்தை தடுக்கணும் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகளுக்கான வாடகையை, உடனுக்குடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டி லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ள தகவல், அதிர்ச்சி அளிக்கிறது.
போராட்டம் காரணமாக, அரசு கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள், மேலும் தேக்கமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டியது, அரசின் தலையாய கடமை.
- நாகேந்திரன் தமிழக பா.ஜ., தலைவர்
'விவசாயிகளில் ஒருவராக இருந்து பார்க்க வேண்டும்'
பா.ம.க., தலைவர் அன்புமணியின் அறிக்கை:
காவிரி பாசன மாவட்டங்களை போலவே, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார், விழுப்புரம் மாவட்டங்களிலும், நடப்பாண்டில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. கொள்முதல் செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யவில்லை. வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட காரணங்களை கூறி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நெல் கொள்முதல், 33 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதனால், விவசாயிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களுடன், இரவு - பகலாக கொள்முதல் நிலையங்கள் முன் காத்திருக்கின்றனர். நிறுத்தி வைக்கப்பட்ட நெல் கொள்முதல் எப்போது துவங்கும் என்பது குறித்து, அதிகாரிகளிடமிருந்து உறுதியான பதில் எதுவும் இல்லை.
விவசாயிகளின் பிரச்னையை, அதிகாரத்தின் உச்சியில் இருந்து, அலட்சியமாக பார்ப்பதை விடுத்து, விவசாயிகளில் ஒருவராக இருந்து பார்க்க வேண்டும். கொட்டிக் கிடக்கும் நெல்லை உடனே கொள்முதல் செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

